Published : 18 Jan 2023 10:08 PM
Last Updated : 18 Jan 2023 10:08 PM

IND vs NZ முதல் ODI | பயம் காட்டிய பிரேஸ்வெல் - சான்ட்னர் இணையர்: 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

வெற்றியை கொண்டாடும் இந்திய அணி வீரர்கள்

ஹைதராபாத்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. இறுதி ஓவர் வரை இந்த ஆட்டம் சென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு தனது அதிரடி ஆட்டத்தால் பிரேஸ்வெல் அச்சுறுத்தல் கொடுத்தார். இருந்தாலும் அவரது விக்கெட்டை இறுதி விக்கெட்டாக வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்கள் எடுத்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டியது.

அந்த அணிக்கு தேவையான பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. கான்வே, ஆலன், ஹென்றி நிக்கோல்ஸ், மிட்செல், கிளென் பிலிப்ஸ், டாம் லேதம் என ஆறு பேட்ஸ்மேன்கள் அந்த அணி 131 ரன்களை எட்டிய போதே தங்களது விக்கெட்டுகளை இழந்திருந்தனர். பின்னர் சான்ட்னர், பிரேஸ்வெல் இடையே அபார கூட்டணி அமைந்தது.

பிரேஸ்வெல் - சான்ட்னர்

இருவரும் 161 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சை அட்டாக் செய்து ஆடி இருந்தனர். பிரேஸ்வெல் சதம் விளாச, சான்ட்னர் அரை சதம் கடந்தார். இந்த அபாய கூட்டணியை சிராஜ் தகர்த்தார். சான்ட்னரை 57 ரன்களில் அவர் வெளியேற்றினார்.

இருந்தாலும் பிரேஸ்வெல் பந்தை பவுண்டரிக்கு விரட்டுவதில் பிஸியாக இருந்தார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் பிரேஸ்வெல் இருந்தார். அந்த ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். முதல் பந்தில் சிக்சர் விளாசினார். அடுத்த பந்து வொய்டாக வீசப்பட்டது. அடுத்த பந்தை நேராக காலில் எல்.பி வாங்கி பிரேஸ்வெல் அவுட்டானார். அவர் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். 12 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் இதில் அடங்கும்.

நியூஸிலாந்து 49.2 ஓவர்களில் 337 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதோடு அவர் பந்துவீச்சில் எதிரணியின் ரன் குவிப்பும் கட்டுப்படுத்தப்பட்டது.

முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ரோகித், 34 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கோலியும், இஷான் கிஷனும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

பின்னர் சூர்யகுமார் யாதவ் உடன் 65 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா உடன் 74 ரன்களுக்கும் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் கில். சூர்யகுமார் 31 ரன்களிலும், பாண்டியா 28 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் விரைவாக பெவிலியன் திரும்பி இருந்தனர். அதே நேரத்தில் சுமார் 26 பந்துகள் வரை இந்திய அணி பவுண்டரி விளாசாமல் இருந்தது. இருந்தாலும் கடைசி மூன்று ஓவர்களில் கில் வானவேடிக்கை காட்டி இருந்தார். சிக்ஸர் மழை பொழிந்த அவர் கடைசி ஓவரில் 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x