Published : 15 Jan 2023 09:58 PM
Last Updated : 15 Jan 2023 09:58 PM

IND vs SL 3-வது ODI | இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது

இந்திய வீரர்கள்

திருவனந்தபுரம்: இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்காக பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் சதம் விளாசினர். பவுலிங்கில் சிராஜ் அபாரமாக பந்து வீசி அசத்தினார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி ஞாயிறு (ஜனவரி 15) அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் மற்றும் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ரோகித், 42 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பின்னர் வந்த கோலி உடன் இணைந்து 131 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கில். அவர் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மறுபக்கம் கோலி இறுதி வரை அவுட்டாகாமல் 110 பந்துகளில் 166 ரன்களை குவித்தார். இதில் 13 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 390 ரன்களை குவித்தது இந்தியா. 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது.

அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 22 ஓவர்களில் வெறும் 73 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் சரண்டர் ஆனது இலங்கை. இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் 10 ஓவர்கள் வீசி, 32 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் முகமது சிராஜ். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இலங்கை வீரர் கருணரத்னே ரன் அவுட் ஆனார். பண்டாரா, பேட் செய்ய வராமல் ரிட்டையர்டு ஹர்ட் கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும், தொடரின் நாயகன் விருதையும் கோலி பெற்றார். அவர் 2 சதங்களை இந்த தொடரில் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x