Published : 08 Jan 2023 06:02 AM
Last Updated : 08 Jan 2023 06:02 AM

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா திணறல்

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர். படம்: ஏஎப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 131 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. உஸ்மான் கவாஜா 195, மாட் ரென்ஷா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டு பேட்டிங் செய்யாமல் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. கேப்டன்டீன் எல்கர் 15 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். சரேல் எர்வீ 18 ரன்னில் நேதன் லயன் பந்தில் போல்டானார்.

ஹென்ரிச் கிளாசென் (2), கயா சோண்டோ (39), கைல் வெர்ரன்னே (19) ஆகியோர் பாட்கம்மின்ஸ் பந்தில் வெளியேறினர். தெம்பா பவுமா 74 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 59 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

மார்கோ ஜேன்சன் 10, சைமன் ஹார்மர் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3, ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்க அணி.

கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் எஞ்சிய 4 விக்கெட்களையும் விரைவாக வீழ்த்தி அந்த அணிக்கு பாலோ-ஆன் கொடுப்பதில் ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டக்கூடும். இது நிகழ்ந்தால் 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து விக்கெட்களையும் வேட்டையாடுவதில் ஆஸ்திரேலியா கூடுதல் முனைப்புகாட்டும். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றுவதுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்துவிடும்.

கடைசி நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பை ஈடுசெய்யும் விதமாக இன்று 98 ஓவர்கள் வீசப்படும் என்பதால் ஆஸ்திரேலிய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஏனெனில் பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி இரு இன்னிங்ஸையும் சேர்த்து 86 ஓவர்களில் 20 விக்கெட்களை தாரைவார்த்தது. மெல்பர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 137.3 ஓவர்களை மட்டுமே சந்தித்து தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x