Published : 13 Dec 2016 02:17 PM
Last Updated : 13 Dec 2016 02:17 PM

கோலியை குறைகூற வேண்டாம்; தோல்வியை ஏற்றுக் கொள்க: ஆண்டர்சன்-அஸ்வின் வாக்குவாதம்

கோலி பேட்டிங் பற்றி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் மும்பை டெஸ்ட் போட்டியின் போது குறைகூறியிருந்தார். இதனையடுத்து மறுநாள் கடைசி தின ஆட்டத்தில் அஸ்வினுக்கும் ஆண்டர்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதாவது விராட் கோலி பற்றி கூறிய கருத்து தேவையற்றது என்று அஸ்வின் ஆண்டர்சனிடம் கூறியதாக தெரிகிறது, ஆண்டர்சன் களமிறங்கியது முதல்அஸ்வின் அவரிடம் ஏதோ தீவிரமாக பேசினார், வாக்குவாதமும் தீவிரமடைந்தது.

இதனையடுத்து கேப்டன் கோலி நடுவர் எராஸ்மஸ் ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி விராட் கோலி கூறும்போது, “ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்முறையாக நான் சமாதானம் செய்யும் பங்காற்றினேன்.

ஆண்டர்சன் முதல்நாளன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்து அஸ்வினுக்கு பிடித்தமானதாக இல்லை. எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. மைதானத்தில்தான் அஸ்வின் அதை என்னிடம் தெரிவித்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, நான் அதை நினைத்துச் சிரித்தேன்.

அஸ்வின், ஆண்டர்சன் கருத்தினை ஏற்கவில்லை, அவர் எந்த ஒரு கடுமையான வார்த்தைகளையும் பேசாமல் ஆண்டர்சனுக்கு தனது ஏமாற்றத்தைத் தெரியப்படுத்தியதாகவே நான் கருதுகிறேன். மேலும் தோல்வியைத் தோல்வியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அஸ்வின் அவரிடம் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.

பிற்பாடு ஜேம்ஸ் ஆண்டர்சனிடம், இதெல்லாம் நிகழவே செய்யும், நாம் இதனை பெரிது படுத்தக் கூடாது என்றேன்” என்று கோலி விளக்கம் அளித்தார்.

கோலியின் பேட்டிங் கோளாறுகளை இந்திய பிட்ச்கள் மறைத்து விடுகின்றன என்றும் இங்கிலாந்தில் அவர் மலிவாக ஆட்டமிழந்ததிலிருந்து கோலியின் பேட்டிங் மாறியிருப்பதாக தான் உணரவில்லை என்றும் ஆண்டர்சன் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x