Published : 29 Dec 2022 09:25 PM
Last Updated : 29 Dec 2022 09:25 PM

திருவள்ளூர் | நேபாளத்தில் நெஞ்சு வலியால் உயிரிழந்த தமிழக வாலிபால் விளையாட்டு வீரரின் உடல் அடக்கம்

உயிரிழந்த வாலிபால் விளையாட்டு வீரர் ஆகாஷ்

திருவள்ளூர்: நேபாள நாட்டில் நடைபெற்ற வாலிபால் விளையாட்டில் பங்கேற்று விளையாடிய போது உயிரிழந்த தமிழக வீரர் ஆகாஷின் உடல் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

27 வயதான அவர் பல்கலைக்கழக அளவிலும், மாநில அளவிலும் வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கியவர். நேபாள நாட்டில் நடைபெற்ற வாலிபால் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விதமாக கடந்த 21-ம் தேதி அங்கு சென்றிருந்தார். தொடர்ந்து 25-ம் தேதி அன்று நடைபெற்ற போட்டியில் விளையாடி உள்ளார். பின்னர் அறையில் இருந்த அவருக்கு அன்றைய தினமே திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வாந்தியும் எடுத்துள்ளார்.

அவருடன் உடன் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சார்பில் உயிரிழந்த ஆகாஷின் உடலை நேபாள நாட்டிலிருந்து பெற்றுத்தர மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் நேபாளம் - டெல்லி - சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து அவரது சொந்த ஊரான கைவண்டூர் கிராமத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர். அதன் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவருடன் வாலிபால் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x