Published : 27 Oct 2022 04:30 PM
Last Updated : 27 Oct 2022 04:30 PM

T20 WC | நெதர்லாந்தை 56 ரன்களில் வென்றது இந்தியா; அபாரமாக பந்து வீசிய புவி!

இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார்

சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் (புவி) அபாரமாக பந்து வீசி இருந்தார். பேட்டிங்கில் ரோகித், கோலி மற்றும் சூர்யகுமார் ஆகியோர் அரைசதம் விளாசி இருந்தனர்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது இந்தியா. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நெதர்லாந்து விரட்டியது.

அந்த ரன்களை சேர்க்க தொடக்கம் முதல் நெதர்லாந்து தடுமாறியது. விக்ரம்ஜித் சிங், மேக்ஸ், லீட், கொலின், டாம் கூப்பர், டிம், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், பீக், கிளாசன் என சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது அந்த அணி. அதன் மூலம் இந்தியா வெற்றி பெற்றது. சூப்பர் 12 சுற்றில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று குரூப் 2-வில் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

பவர் பிளே ஓவர்களில் முதல் இரண்டு ஓவர்களை வீசிய புவனேஷ்வர் குமார், அதில் ரன் ஏதும் கொடுக்காமல் அந்த இரண்டு ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி இருந்தார். அதில் ஒரு ஓவரை விக்கெட் மெய்டனாக அவர் வீசி இருந்தார். இந்தப் போட்டியில் மொத்தம் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்திருந்தார். 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் மொத்தம் 14 பந்துகளை ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பால்களாக வீசி இருந்தார்.

அஸ்வின் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அர்ஷ்தீப், ஹாட்-ட்ரிக் கைப்பற்றும் வாய்ப்பை மிஸ் செய்தார். அக்சர் படேல் 2 விக்கெட்டுகளும், ஷமி 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். இந்திய பவுலர்கள் மொத்தம் 58 பந்துகளை டாட் பால்களாக வீசி இருந்தனர். சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

முன்னதாக, இந்திய அணிக்காக ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி இருந்தனர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ராகுல் 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

இருந்தும் அதை அவர் ரிவ்யூ செய்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த பந்து ஸ்டம்புகளை தகர்க்க தவறியது. அது டிவி ஒளிபரப்பில் தெளிவாக தெரிந்தது. பின்னர் கோலியும், ரோகித்தும் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித், 39 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அவுட்டானார்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. இருவரும் 95 ரன்களை சேர்த்திருந்தனர். கோலி 37 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். கடந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் 82 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் அவுட்டானதும் கோலியும், சூர்யகுமாரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவிப்பதில் ஆர்வம் செலுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. கோலி 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 25 பந்துகளில் அரைசதம் பதிவு செய்திருந்தார் அவர்.

நெதர்லாந்து அணி இந்த போட்டியில் இரண்டு கேட்சை நழுவவிட்டு இருந்தது. ஆனாலும் அந்த அணி ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் பவுண்டரி வாய்ப்புகளை தடுத்தது. எப்படியும் பவுண்டரி லைனில் தரமான ஃபீல்டிங் மூலம் சுமார் 20 ரன்களை அந்த அணி சேவ் செய்திருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x