Published : 25 Oct 2022 10:13 PM
Last Updated : 25 Oct 2022 10:13 PM

T20 WC அலசல் | இலங்கை கேப்டனின் 2 தவறுகள்... ‘கேம் சேஞ்சர்’ ஸ்டாய்னிஸ் சிக்சர் மழை... - நெட் ரன் ரேட் பூஸ்ட்டுடன் ஆஸி. வெற்றி!

பெர்த் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரின் 19-வது போட்டியில் இலங்கையை 158 ரன்களுக்கு மட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா, பிறகு ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 59 ரன்கள் விளாச 16.3 ஓவர்களில் 158/3 என்று நியூஸிலாந்துக்கு எதிராக கோட்டை விட்ட நெட் ரன் ரேட் பூஸ்ட்டுடன் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இத்தனைக்கும் ஆஸ்திரேலியா சேசிங்கில் முதல் 7 ஓவர்கள் வரை பவுண்டரியே அடிக்க முடியவில்லை. நல்லக் கட்டுப்பாட்டுடன் தொடங்கிய இலங்கை அணி ஸ்பின்னர்களால் காலியானது. கிளென் மேக்ஸ்வெல் ஒருமுறை லாஹிரு குமாரா பவுன்சரை தொண்டையில் வாங்கி கீழே விழவும் செய்தார்.

அன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு போட்டது போலவே இந்தப் பிட்சும் கிரீன் டாப் பிட்ச், துணைக்கண்ட அணிகளுக்கென்றே கிரீன் டாப் பிட்சை போடுகின்றனர். மாறாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் மட்டைப் பிட்ச். நியூசிலாந்து 200 ரன்களுக்கும் மேல் விளாசியது. அதனால் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஏரோன் பிஞ்ச் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஸ்டாய்னிஸ் காட்டடி தர்பார், சாதனை அரைசதம் & கேப்டன் ஷனகா செய்த இரு தவறுகள்: மேக்ஸ்வெல் பவுண்டரிக் கோட்டருகே பந்தாரா என்ற பதிலி வீரரால் அபாரமாக கேட்ச் செய்யப்பட்டார். பந்து பவுண்டரிக்குப் பறந்தது. விட்டால் அது சிக்சர். அப்போது எல்லைக்கோட்டு கயிற்றுக்கு அருகே இருந்த பந்தாரா சரியாக எம்பி பந்தைப் பிடித்தார், நூலிழையில் பேலன்ஸ் தவறி கயிறை மிதித்திருப்பார், ஆனால் அட்டகாசமான பேலன்ஸ் அவரிடம் இருந்தது, மேக்ஸ்வெல் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 12 பந்துகளில் 23 என்று முக்கியப் பங்களிப்பு செய்து வெளியேறினார்.

இவர் ஆட்டமிழந்தவுடன் ஸ்டாய்னிஸ் இறங்கி இந்த மூடில் சொந்த மண்ணில் ஆடுவார் என்று இலங்கை எதிர்பார்க்கவில்லை. ஹசரங்காவைக் கொண்டு வந்தனர். லாங் பவுண்டரியாக இருந்தாலும் காட்டடி அடித்தார், எல்லாம் பவர் ஹிட்கள். ஆனால், வந்தவுடன் ஸ்டாய்னிஸ் அப்பர் கட் அடித்து தேர்ட் மேன் பவுண்டரிக்கு கருணரத்னே பந்தை அனுப்பினார். அப்போதே சுதாரித்திருக்க வேண்டும் கேப்டன் ஷனகா, ஷார்ட் தேர்ட்மேனை நிறுத்தியிருக்க வேண்டும். ஷார்ட் தேர்ட் மேன், லாங் தேர்ட்மேன் இரண்டையுமே நிறுத்தியிருக்க வேண்டும், இதனால் என்ன ஆனது எனில், பிஞ்ச் ஆடிய ஒரு ஸ்லாஷ் தேர்ட்மேனில் கேட்ச் போல் சென்றது; ஆனால் தீக்‌ஷனாவினால் பிடிக்க முடியவில்லை.

ஸ்டாய்னிஸ் இன்னொரு பந்தை இப்படித்தான் எட்ஜ் செய்ய ஷார்ட் தேர்ட் மேன் இருந்திருந்தால் கேட்ச் ஆகியிருக்கும், ஆனால் ஏனோ ஷார்ட் தேர்ட் மேனை நிறுத்தவில்லை, இலங்கை கேப்டன் ஷனகா. பிஞ்ச்சும் ஒரு பந்தை அப்படித்தான் ஆடினார், நிச்சயம் அப்போதும் ஷார்ட் தேர்ட்மேனில் கேட்ச் ஆகியிருக்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் பீல்டர் இல்லை. ஏற்கெனவே பிஞ்சிற்கு ஒரு கேட்ச் விடப்பட்டது, ஹை கேட்ச் அது, அதை மேக்ஸ்வெலுக்கு அபார கேட்ச் எடுத்த பதிலி வீரர் பந்தாராதான் ட்ராப் செய்தார்.

ஒரு சிறு மார்ஜினல் விஷயம்தான் கொஞ்சம் தோனி போல் யோசித்திருந்தால் ஷார்ட் தேர்ட் மேன் நிறுத்தியிருந்தால் ஒருவேளை ஸ்டாய்னிஸ் காலியாகியிருக்கலாம். பிஞ்ச் அவுட் ஆகியிருக்கலாம். நிச்சயம் ஆட்டம் 20வது ஓவர் வரை சென்றிருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறும் நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஆனால், ஷனகா அந்த மாதிரி யோசிக்கும் கேப்டனாக இல்லை என்பது இலங்கையின் குறைபாடு. ஸ்டாய்னிஸ் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்த 3 பவுண்ட்ரிகளில் 2 எட்ஜ் பவுண்டரி, அந்த இடத்தில்தான் ஷார்ட் தேர்ட் மேன் இருந்திருந்தால் ஸ்டாய்னிஸ் ஒருவேளை காலியாகியிருக்கலாம், இது ஷனகாவின் யோசனையின்மையைக் காட்டுகிறது.

சொந்தப் பிட்சில் ஸ்டாய்னிஸ் இறங்கினார். மைதானத்தில் அவரது நண்பர்கள், சொந்தக்காரர்கள் என்று பெரிய கூட்டம் எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. ஆஸ்திரேலியாவும் இலங்கையின் 157/6 என்ற இலக்கை விரட்டுவதில் சிரமப்பட்டது; காரணம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் பிரஷர் போட, ஆஸ்திரேலியா எதிர்பார்த்த அதிரடி தொடக்கம் கிடைக்கவில்லை. கிரீன் டாப் பிட்ச், புதிய பந்தில் ரன்களை சப் காண்டினண்ட் குழிப்பிட்ச்களில் எடுப்பது போல் எடுக்க முடியாது. அதனால்தான் புதிர் ஸ்பின்னர் தீக்‌ஷனா வந்தவுடன் வார்னர் வாரிக்கொண்டு அடிக்கப் போனார். நன்றாகத் தூக்கி வீசப்பட்ட பந்தை வார்னர் ஒதுங்கிக் கொண்டு ஆடப்போய் ஷனகாவிடம் கேட்ச் ஆனார்.

மிட்செல் மார்ஷ் 17 பந்தில் 18 ரன்கள் என்று லாங் ஆஃபில் கேட்ச் ஆகி வெளியேறினார். டி.எம்.டிசில்வா இவர் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகுதான் கிளென் மேக்ஸ்வெல் 12 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 23 ரன்களில் அற்புத கேட்சுக்கு வெளியேறினார். ஆஸ்திரேலியா 12.2 ஓவர்களில் 89/3 என்று இருந்தது. ஸ்டாய்னிஸ் முதல் 3 பவுண்டரிகளில் 2 அதிர்ஷ்டம் வாய்ந்தவை என்று பார்த்தோம். ஆனால், அடித்த சிக்சர்க்ள் அப்படியல்ல... அடி ஒவ்வொன்றும் இடி போல் இறங்கியது. இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்காவை லாங் ஆனுக்கு மேல் 2 சிக்சர்களை இடிபோல் இறக்கினார். அருமையாக வீசிய புதிர் ஸ்பின்னர் தீக்‌ஷனாவையும் விட்டு வைக்கவில்லை. இவரை லாங் ஆன் மேல், எக்ஸ்ட்ரா கவர் திசை மேல், நேராக என்று 3 சிக்சர்களை விளாசினார் ஸ்டாய்னிஸ், இதில் எக்ஸ்ட்ரா கவர் திசை மேல் அடித்த சிக்ஸ் வேற ரகம்.

முதல் 2 ஓவர்களில் வெறும் 3 ரன்கள் வார்னர் விக்கெட் என்று அசத்திய் தீக்‌ஷனாவை 20 ரன்க்ள் விளாச அவர் அனாலிசிஸ் காலியனது. 17 பந்துகளில் அரைசதம் எடுத்து ஆஸ்திரேலியாவின் அதிவேக டி20 அரைசத சாதனையை நிகழ்த்தினார் ஸ்டாய்னிஸ். அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர் குமாராவை ஒரு அபாரமான சிக்சரை அடித்து 18 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக, மறுமுனையில் ஏரோன் பிஞ்ச் செம தடவு தடவி 42 பந்துகளில் 1 சிக்சருடன் 31 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா 16.3 ஓவர்களில் வெற்றி பெற்று அட்டவணையில் 2 புள்ளிகளை பெற்றது.

சரித் அசலங்காவின் இறுதி அதிரடியும் கடைசி ஓவர் பாரிவள்ளல் ஆன கம்மின்சும்: இலங்கை அணி கிரீன் டாப் பிட்சில் ஒன்றும் செய்ய முடியவில்லை. கூடுதல் பவுன்ஸில் ஆட முடியவில்லை. இடுப்புக்குக் கீழ் வந்தால் கத்தி வீசும் துணைக்கண்ட வீரர்கள் இடுப்புக்கு மேல் கொஞ்சம் எழும்பினாலும் மட்டையை தொங்க விட்டு விடுவது வழக்கம்.

இலங்கை தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 45 பந்துகள் ஆடி ஒருநாள் போட்டி போல் 40 ரன்களையே எடுத்தார். அதிலும் ஏகப்பட்ட பந்துகளில் அவர் பீட்டன் ஆனார். குசால் மெண்டிஸ் கம்மின்ஸ் வேகத்துக்கு 5 ரன்களில் காலியானார். நிசாங்காவும் தனஞ்ஜெயாவும் ஒருமாதிரி செட் ஆகும் சமயத்தில் இடது கை ஸ்பின்னர் ஆகர் வந்து வார்னரின் அபார கேட்சுக்கு தனஞ்ஜெயாவை (26) வீழ்த்தினார். பனுகா ராஜபக்ச (7), கேப்டன் ஷனகா (3), ஹசரங்கா (1) ஆகியோர் ஆஸ்திரேலியா வேகத்துக்கு இரையாக அசலங்கா சிறப்பாக ஆடினார். 25 பந்துகளில் 38 ரன்களை விளாசினார் அசலங்கா. சமித் கருணரத்னே இவருக்கு உறுதுணையாக ஆடி 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 15 பந்துகளில் 37 ரன்களை விளாசினர், இதில் கமின்ஸ் தன் கடைசி ஓவரில், 20வது ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கினார், ஆனால் அசலங்கா 2 அருமையான சிக்சர்களை விளாசியதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி எக்ஸ்ட்ராஸ்களை அதிகம் கொடுத்தது 12 வைடுகளுடன் 23 ரன்களை எக்ஸ்ட்ராஸ் ஆகக் கொடுத்தது. இந்த 23 ரன்கள் வெறும் 10 ரன்களாகவோ 5 ரன்களாகவோ இருந்திருந்தால் இலங்கை 157 ரன்களைக் கூட எட்டியிருக்க முடியாது. மொத்தத்தில் துணைக்கண்ட அணிகளுக்கு கிரீன் டாப் பிட்ச், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்துக்கு பேட்டிங் பிட்ச் என்ற திட்டம் போடப்பட்டிருக்கிறதா என்பதையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x