Published : 11 Sep 2022 08:03 AM
Last Updated : 11 Sep 2022 08:03 AM
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் மோதுகின்றன.
தசன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருந்த அந்த அணி சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியிருந்தது. பேட்டிங்கில் குஷால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, தனுஷ்கா குணதிலகா, பனுகா ராஜபக்ச, தசன் ஷனகா ஆகியோர் பேட்டிங் வரிசையில் முதல் 5 இடங்களில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆசிய கோப்பையில் இலங்கை வீரர்கள் 28 சிக்ஸர்கள், 62 பவுண்டரிகளை விளாசியுள்ளனர். பேட்ஸ்மேன்களின் ஸ்டிரைக் ரேட் அபாரமாக உள்ளது. பந்து வீச்சில் மகேஷ் தீக் ஷனா. ஹசரங்கா, மதுஷங்கா பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் சூப்பர் சுற்றில் அடைந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். முகமது ரிஸ்வான், முகமது நவாஸ், நசீம் ஷா ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். இறுதிப் போட்டி என்பதால் கேப்டன் பாபர் அஸம் பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும். இந்தத் தொடரில் அவர், 5 ஆட்டங்களில் 63 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT