Published : 30 Aug 2022 08:19 AM
Last Updated : 30 Aug 2022 08:19 AM

உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு டி 20-ல் விராட் கோலி விளையாடுவாரா?

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி 20 ஆட்டங்களில் விளையாடுவாரா என கிரிக்கெட் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

பேட்டிங்கில் உலக அரங்கில் கோலோச்சிய விராட் கோலி கடந்த 3 வருடங்களாக தடுமாற்றம் கண்டுவருகிறார். அதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டி 20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மட்டை வீச்சு அணுகுமுறை நவீன காலத்துக்கு தகுந்த அளவில் இல்லை என்ற கருத்து எழத்தொடங்கியுள்ளது. டி 20 வடிவில் விராட் கோலி 20 அல்லது 35 ரன்கள் சேர்க்கிறார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் பெரிய அளவில் இல்லை என்பதே தற்போது பேசு பொருளாக உள்ளது.

இந்த கருத்து கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியதில் இருந்து எழத்தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது. இந்த ஆட்டம்தான் விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட கடைசி டி 20 தொடர். பணிச்சுமையை குறைக்க வேண்டும் என கருதிய விராட் கோலி டி 20 வடிவில் மட்டும் கேப்டன் பதவியை துறந்தார். விராட் கோலியின் முடிவு எந்த பலனையும் கொடுக்கவில்லை. தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவி விராட்
கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது. இதன் பின்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியே விலகினார். இதன்பின்னர் விளையாடிய ஆட்டங்களிலும் தான் சந்தித்த மன அழுத்த பிரச்சினைகள் குறித்தும் சமீபத்தில் விராட் கோலி பகிர்ந்துகொண்டார்.

33 வயதில் விராட் கோலி 464 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் விராட் கோலி இந்த ஆண்டில்
சர்வதேச டி 20-ல் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் முறையே 17, 52, 1, 11, 35 ரன்களே சேர்த்துள்ளார். இதில் 17 ரன்களை 13 பந்துகளிலும், 52 ரன்களை 41 பந்துகளிலும், 35 ரன்களை 34 பந்துகளிலும் எடுத்துள்ளார். இந்திய அணிக்கு தற்போது தேவைப்படுவது ஒவ்வொரு ஆட்டத்திலும் அரை சதங்கள் அல்ல, ஆனால் 20 பந்துகளில் 35 ரன்கள்,
10 பந்துகளில் 20 ரன்கள் எடுப்பதுஅவசியமாகி உள்ளது. புள்ளி விவரங்களின்படி வேகம் குறைந்து வீசப்படும் 6 முதல் 14 ஓவர்களில் விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் 100 கூட தாண்டவில்லை. இங்குதான் சறுக்கல் தொடங்குகிறது.

டி 20 உலகக் கோப்பை வரும் அக்டோபரில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பிசிசிஐ தரப்பினரோ அல்லது இந்திய அணி நிர்வாகமோ விராட் கோலியிடம் பேசக்கூடும். ஒருவேளை தற்போது முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி 20 வடிவம் குறித்து விராட் கோலி முக்கிய முடிவை எடுக்கக்கூடும். இதன் விளைவு டி 20 போட்டிகளை தவிர்த்து ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கூடுதல் கவனம் செலுத்துவதாக அமையலாம். ஏனெனில் அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும் அடுத்த 5 வருட காலத்தில் இந்தியஅணி 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x