Published : 09 Aug 2022 11:53 PM
Last Updated : 09 Aug 2022 11:53 PM

“மீண்டும் சென்னை வாருங்கள், உங்களுக்காக இங்கே ஒரு சகோதரன் இருக்கிறேன்” - வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் முதல்வர் நெகிழ்ச்சி

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக பேசினார்.

அதில், "இங்கு வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும், தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்து சமூக ஊடகங்களில் பாராட்டி நன்றி தெரிவிக்கும்போது நான் அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட, நான் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறேன். தொடக்க விழாவில் நான் குறிப்பிட்டதைப்போல, இந்த செஸ் ஒலிம்பியாட் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்லாமல், இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய பண்பாட்டுத் திருவிழாவைப் போல் நடந்துள்ளது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்கள் - பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

கடந்த இரு வாரங்களாக பல்வேறு நாடுகளில் இருந்தும் செஸ் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உலகின் பழம்பெரும் மரபுச்சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் மாமல்லபுரத்தில் தங்கி ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் நல்வாய்ப்பைப் பெற்றனர்.

என் அன்புக்குரிய வீரர்களே, சென்னையில் உங்களுக்குச் செய்து தரப்பட்ட ஏற்பாடுகளும், இங்கு கழித்த நாட்களும் உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்று உளமார நம்புகிறேன். உங்களது நாடு, பண்பாடு, மரபு குறித்து நாங்கள் அறிந்துகொள்ளவும் இது ஒரு சிறப்பான நல்வாய்ப்பாக அமைந்தது. செஸ் போட்டியில் பங்கேற்ற நினைவுகளுடன், இம்மண்ணின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் உணவின் சுவை ஆகியவற்றையும் நீங்கள் திரும்பிச் செல்கையில் உங்களுடன் கொண்டுசெல்வீர்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றி பெறப் போகும் வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். எதிலும் வெற்றி - தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியமானது. இந்த பங்கேற்பு ஆர்வத்தை எப்போதும் விட்டுவிடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த இருக்கும் புதாபெஸ்த் நகருக்கு என் வாழ்த்துகள்.

என் அன்புக்குரிய சர்வதேச வீரர்களே, நீங்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்கு வர வேண்டும். மறந்துவிட வேண்டாம், உங்களுக்காக இங்கே ஒரு சகோதரன் இருக்கிறேன்." என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x