Published : 28 Jul 2022 08:53 PM
Last Updated : 28 Jul 2022 08:53 PM

சென்னை செஸ் ஒலிம்பியாட்: பாகிஸ்தான் திடீர் புறக்கணிப்பு; காரணத்துக்கு பதிலடி தந்த இந்தியா

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இருந்து அண்டை நாடான பாகிஸ்தான் திடீரென விலகி உள்ளது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வு வரும் ஆகஸ்ட் 10 வரையில் நடைபெறுகிறது. மொத்தம் 186 நாடுகளில் இருந்து சுமார் 2000+ வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகி உள்ளது. மேலும், இதற்கு காரணமாக கடந்த 21-ம் தேதி காஷ்மீரில் நடைபெற்ற ஜோதி ஓட்டத்தை காரணமாக சொல்லியிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் இதில் பங்கேற்கும் நோக்கில் இந்தியாவுக்கு வந்த நிலையில், போட்டியில் இருந்து விலகுவது குறித்து அந்த நாடு அறிவித்துள்ளது.

இதனை அந்த நாட்டின் வெளியுறவு அலுவலகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. “சர்வதேச அங்கீகாரம் மிக்க இந்த விளையாட்டில் இந்தியா அரசியல் செய்கிறது. அதற்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் இதில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

“செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்கும் நோக்கில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. இந்நிலையில், அந்த நாட்டின் புறக்கணிப்பு முடிவு ஆச்சரியம் அளிக்கிறது. இதுபோன்ற விலகல் அறிக்கையின் மூலம் பாகிஸ்தான் இதனை அரசியல் செய்துள்ளது துரதிஷ்டவசமானது” என தெரிவித்துள்ளார் வெளியுறவு விவகாரங்கள் துறையின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி.

மேலும், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x