Published : 10 May 2016 09:32 AM
Last Updated : 10 May 2016 09:32 AM
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனும் ஆன இங்கி லாந்தின் ஆன்டி முர்ரேவை 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்றது.
ஆன்டி முர்ரே தோல்வியடைந்ததால் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பறிகொடுத்துள்ளார். ஜோகோவிச்சுக்கு எதிராக முர்ரே தோல்வியை சந்திப்பது இது 23-வது முறையாகும்.
அதிலும் கடந்த 2014 முதல் தற்போது வரை இருவரும் 13 ஆட்டத்தில் விளையாடி உள்ளனர். இதில் முர்ரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 12 ஆட்டத்திலும் ஜோகோவிச்சே ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இந்த ஆண்டில் ஜோகோவிச் கைப்பற்றும் 5-வது பட்டம் இதுவாகும்.
மாட்ரிட் ஓபனில் ஜோகோவிச் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். கடைசியாக அவர் 2011ல் கோப்பை வென்றிருந்தார். தற்போது பட்டம் வென்றுள்ளதன் மூலம் ஜோகோவிச் புதிய சாதனையும் படைத்துள்ளார்.
மாஸ்டர்ஸ் அந்தஸ்து பெற்ற தொடரில் அவர் வெல்லும் 29-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT