Published : 03 Jul 2022 05:44 AM
Last Updated : 03 Jul 2022 05:44 AM

2-வது சுற்றில் சானியா ஜோடி முதல் பயிற்சி ஆட்டத்தில் தீபக் ஹுடாவின் அதிரடி வரை - ஸ்போர்ட்ஸ் ஹைலைட்ஸ்

2-வது சுற்றில் சானியா ஜோடி

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.

4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் லண்டனில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா- குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடி சானியா மிர்சா - பாவிக் ஜோடி 6-4, 3-6, 6(10)-6(3) என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்சே - ஸ்பெயினின் டேவிட் வேகா ஜோடியை வீழ்த்தியது.

இந்தியா 416 ரன்கள் குவிப்பு

பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தை ஜடேஜா 83 ரன்களுடனும், மொகமது ஷமி ரன் எடுக்காமலும் தொடங்கினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா சதமடித்தார். 104 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா அதிரடியாக விளையாடி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உலக சாதனை: ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் பும்ரா விளாசிய 29 ரன்கள், உபரி ரன்கள் உள்பட 35 ரன்கள் கிடைத்தது உலக சாதனையாக அமைந்தது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் 28 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

2003-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவு வீரர் பிரையன் லாரா 28 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. அலெக்ஸ் லெஸ் 6, ஜாக் கிராவ்லி 9, ஒல்லி போப் 10 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 18, ஜானி பேர்ஸ்டோ 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பயிற்சி ஆட்டம்: இந்தியா வெற்றி

டெர்பி: டி20 கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாச்தில் டெர்பிஷையர் அணியை வென்றது.

இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியா, டெர்பிஷையர் அணிகளுக்கு இடையிலான டி20 பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய டெர்பிஷையர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேட்சன் 28 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2, அக்சர் பட்டேல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் 38, ருதுராஜ் கெய்க்வாட் 3, தீபக் ஹூடா 59 ரன்கள் சேர்த்தனர்.

சூர்யகுமார் யாதவ் 36 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தீபக் 37 பந்துகளில் 59 ரன்களை விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை

கஜகஸ்தானின் நுர் சுல்தான் நகரில் நடைபெற்று வரும் எலோர்டா கோப்பைக்கான குத்துச்சண்டைப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை கலைவாணி ஸ்ரீநிவாசன் முன்னேறியுள்ளார். சென்னையைச் சேர்ந்த கலைவாணி நேற்று நடைபெற்ற 48 கிலோ பிரிவு மகளிர் அரை இறுதிச் சுற்றில், உஸ்பெகிஸ்தான் வீராங்கனை பர்சோனா போசிலோவாவை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x