Published : 25 Jun 2022 06:53 AM
Last Updated : 25 Jun 2022 06:53 AM

கோ கோ தொடரில் ஒடிசா அரசு - அணியின் உரிமையைப் பெற்றது

புதுடெல்லி: அல்டிமேட் கோ கோ தொடருக்கு பெரிய ஊக்கம் அளிக்கும் வகையில் ஒடிசா அரசாங்கம் அணியின் உரிமையைப் பெற்றுள்ளது.

2013-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா லீக்கில் கலிங்கா லான்சர்ஸ் அணியின் உரிமையை வைத்திருந்த ஒடிசா அரசு, தற்போது நேரடியாக 2-வது விளையாட்டாக கோ கோ-வை கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கே லோ இந்தியா இளையோர் விளையாட்டில் கோ கோ போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒடிசா வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஒடிசா ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அண்ட் புரமோஷன் நிறுவனம் கோ கோ அல்டிமேட் லீக்கில் ஐந்தாவது உரிமையாளராக இருக்கும். அல்டிமேட் கோ கோ லீக்கில் 5-வது அணியாக ஒடிசா இணைகிறது. ஏற்கெனவே அதானி குழுமம் குஜராத் அணியின் உரிமையையும் ஜிஎம்ஆர் குழுமம் தெலங்கானா அணிக்கான உரிமையையும் பெற்றன. இதைத் தொடர்ந்து காப்ரி குளோபல் ராஜஸ்தான் அணியையும் கேஎல்ஓ ஸ்போர்ட்ஸ் சென்னை அணியையும் வாங்கியுள்ளன.

கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி

சென்னை: பூமா மற்றும் இன்டர்நேஷனல் ஸ்ட்ரைக்கர்ஸ் அகாடமியுடன் இணைந்து கால்பந்தில் சிறந்த கோல் அடிக்கும் (ஸ்ட்ரைக்கர்ஸ்) திறமையான இந்திய வீரர்களை உருவாக்கும் வகையில் பயிற்சி அளிக்க சென்னையில் செயல்படும் புட்பால் பிளஸ் அகாடமி திட்டமிட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த 2 வீரர்களுக்கு 100 சதவீத உதவித் தொகையுடன் ஸ்பெயினில் ஒருமாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் இந்தியா முழுவதிலும் இருந்தும் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். இன்டர்நேஷனல் ஸ்ட்ரைக்கர்ஸ் அகாடமியின் முதல் கட்ட பயிற்சி வரும் ஆகஸ்ட் 15 முதல் 21 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் புட்பால் பிளஸ் அகாடமி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

உலக கோப்பையில் 26 வீரர்கள்

சூரிச்: பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் கூடுதலாக 3 வீரர்களை தேர்வு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி நேற்று முன்தினம் சூரிச் நகரில் நடைபெற்ற பிபா கவுன்சில் கூட்டத்தில் அளிக்கப்பட்டது.

இதன்படி உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் அணிகள் கூடுதலாக 3 வீரர்களை உள்ளடக்கிய 26 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து கொள்ளலாம். உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களின் இறுதிப் பட்டியலில் ஒவ்வொரு அணியிலும் குறைந்த 23 வீரர்களும் அதிகபட்சமாக 26 வீரர்களும் இடம் பெறலாம் என பிபா அறிவித்துள்ளது.

2-வது பதக்கம் உறுதி

பாரீஸ்: உலகக் கோப்பை வில்வித்தை பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஜோடி அரை இறுதியில் 156-151 என்ற கணக்கில் எஸ்டோனியாவின் ராபின் ஜாத்மா, லிசல் ஜாத்மா ஜோடியை தோற்கடித்தது. இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா, சிம்ரன்ஜீத் கவுர் ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேயிருந்தது. இன்று நடைபெறும் இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி, பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x