Published : 30 May 2016 09:38 AM
Last Updated : 30 May 2016 09:38 AM
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி அட்லெடிகோ மாட்ரிட் அணியை 5-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் இரவு மிலன் நகரில் நடந்தது. இதில் ரியல் மாட்ரிட் அணியும், அட்லெடிகோ மாட்ரிட் அணியும் மோதின. கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரோட்ரிகஸ், பெபே, கேசிலா என்று வலுவான வீரர்களைக் கொண்ட ரியல் மாட்ரிட் அணி 11-வது முறை பட்டம் வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டியில் ஆடியது. மறுபுறம் முதல்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் கனவுடன் அட்லெடிகோ மாட்ரிட் அணி களம் இறங்கியது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளின் வீரர்களும் ஆக்ரோஷமாக மோதினர். ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் முதல் கோலை அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி முன்னிலை பெற்றது. இருப்பினும் அட்லெடிகோ மாட்ரிட் அணி விட்டுக்கொடுக்காமல் போராடியது. ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் அந்த அணியின் யானிக் கராஸ்கோ ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார்.
11-வது வெற்றி
இதைத்தொடர்ந்து போட்டி இன்னும் கடுமையானது. இரு அணி களின் வீரர்களும் விடாக்கண்டன் - கொடாக்கண்டன்களாக போராட ஆட்டநேர இறுதியில் இரு அணி களும் சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து பெனாலிடி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.
இதில் 5-3 என்ற கோல்கணக்கில் ரியல் மாட்ரிட் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி 11-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT