Published : 16 May 2022 07:29 AM
Last Updated : 16 May 2022 07:29 AM

தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை: ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய அரசு

ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய வீரர் காந்த் கிடாம்பியை வாழ்த்தும் சக அணி வீரர்கள். படம்: பிடிஐ

பாங்காக்: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதின.

இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்திமுதல் முறையாக தாமஸ் கோப்பையைக் கைப்பற்றியது. இப்போட்டியில் இந்தோனேஷியா இதுவரை 14 முறை சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி காந்த் 21-15, 23-21 என்ற செட் கணக்கில் ஜோனதாஸ் கிறிஸ்டியை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 23-21,21-19 என்ற செட் கணக்கில் முகமதுஅஹ்சான்- கெவின் சஞ்சயா சுகமுல்ஜோ ஜோடியை வென்றது.3-வது ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 8-21, 21-17, 21-16 என்ற கணக்கில் அந்தோணி ஜின்டிங்கை வீழ்த்தினார். இதையடுத்து 3-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தி தாமஸ் கோப்பையை இந்தியா வென்றது.

பிரதமர் பாராட்டு

கோப்பையை வென்ற இந்தியஅணியினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்ற இந்தியஅணிக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ரூ.1 கோடி பரிசை அறிவித்துள்ளது. மேலும்,இந்திய அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்தாக்குர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x