Published : 07 Jan 2022 03:59 PM
Last Updated : 07 Jan 2022 03:59 PM

புஜாரா, ரஹானே பேட்டிங் ஃபார்ம்: 4 நாட்களுக்குள் சுனில் கவாஸ்கர் திடீர் பல்டி

இந்திய வீரர்கள் ரஹானே, புஜாரா | கோப்புப்படம்

ஜோகன்னஸ்பர்க்: புஜாரா, ரஹானே இருவருமே நம்பிக்கையை மீட்டெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் திடீர் பல்டி அடித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் இருவருக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சமீபத்தில் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் சேர்க்கவில்லை.

ஜோகன்னஸ்பர்க்கில் புஜாரா, ரஹானே பேட்டிங்கைப் பார்த்து எரிச்சலும், வெறுப்பும் அடைந்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 2-வது இன்னிங்ஸ்தான் புஜாராவுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா, ரஹானே இருவரும் முதல் இன்னிங்ஸில் சொதப்பிவிட்டு, 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இருவரும் அடித்த அரை சதத்தால் சுனில் கவாஸ்கர் திடீரென மனம் மாறி 3 நாட்களுக்குள் பல்டியடித்துள்ளார். அவர் வர்ணனையின்போது கூறுகையில், “ரஹானேவும், புஜாராவும் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை நிரூபித்துவிட்டார்கள். இளம் வீரர்களால் உற்சாகமடைவது எளிது. ஆனால், அவர்கள் மோசமாக ஆட்டமிழக்காமல் இருக்கும் வரை அணி தனது மூத்த வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

புஜாரா, ரஹானேவுக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது, அதற்குக் காரணம், அவர்களின் அனுபவம்தான். கடந்த காலங்களில் அவர்களின் சிறந்த பேட்டிங், பங்களிப்புதான் காரணம். இருவர் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருந்தது. அவர்களும் அதைச் செய்தார்கள்.

சில நேரங்களில் மூத்த வீரர்களிடம் கடினமாக நாங்கள் நடந்து கொண்டிருக்கலாம், பேசியிருக்கலாம். ஏனென்றால், உற்சாகமான இளம் வீரர்கள், வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதைக் காண மக்களும் காத்திருக்கிறார்கள்.

நீண்டகாலமாக இந்த இரு மூத்த வீரர்களும் நன்றாகவே விளையாடுகிறார்கள், மோசமாக விளையாடவில்லை. ஆதலால், அவர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும்.
விராட் கோலி இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது வியப்புதான். ஏற்கெனவே சிட்னியில் ஒரு போட்டியில் டிரா செய்திருந்தனர், மற்றவையில் கோலி இல்லாமல் வென்றிருக்கிறார்கள்''.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x