Last Updated : 07 Jan, 2022 01:10 PM

 

Published : 07 Jan 2022 01:10 PM
Last Updated : 07 Jan 2022 01:10 PM

அருமை புரிஞ்சதா! அடுத்த போட்டியில் கோலி விளையாடுவார்: தோல்விக்குக் காரணங்களை அடுக்கிய ராகுல் திராவிட்

விராட் கோலி | கோப்புப்படம்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டர்பனில் நடக்கும் கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி விளையாடுவார் என நம்புகிறேன் எனப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார். கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் கவனித்தார்.

இந்தப் போட்டியில் கோலி இல்லாமல் இந்திய அணி வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தது. இதனால், கோலியின் அருமையும், பெருமையும் புரிந்து அடுத்த போட்டியில் சேர்க்கப்படுவார், சேர்ந்துவிடுவார் எனத் தெரிகிறது.

விராட் கோலி அணிக்குள் வந்தாலே விஹாரி நீக்கப்படுவார், ஆனால், மந்தமாக பேட்டிங் செய்யும், ஃபார்ம் இல்லாமல் இருக்கும் ரஹானே, புஜாரா இருவரில் ஒருவரும் நீக்கப்படமாட்டார்கள். வழக்கம்போல் ஸ்ரேயாஸ் அய்யர், பஞ்ச்சல் இருவரும் வானத்தைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டியதுதான்.

போட்டி முடிந்தபின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் அளித்த பேட்டியில், ''விராட் கோலி உடல்நிலை சரியாக இருக்கிறது, நலமுடன் இருக்கிறார். சிறிது நேரம் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்தார். கேப்டவுனில் நடக்கும் 3-வது டெஸ்ட்டில் கோலி விளையாடுவார் என நம்புகிறேன். நான் கேள்விப்பட்டவரை, நான் கோலியிடம் பேசியவதுவரை, அவர் உடல்நிலை இயல்புக்கு வந்துவிட்டது'' எனத் தெரிவித்தார்.

தோல்விக்கான காரணம் என்ன?

வான்டரரஸ் ஆடுகளம் இரு அணிகளுக்குமே சவாலானதுதான். ஆடுகளத்தின் தன்மை ஒவ்வொரு நாளும் மாறியது. தென் ஆப்பிரிக்க அணி தங்களுடைய 4-வது இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்தார்கள்.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்துவிட்டால் அதை நீண்ட நேரம் தக்கவைக்க வேண்டும். முதல் இன்னிங்ஸ் மிகவும் சவாலாக இருந்தது, 60 ரன்களைக் கூட பார்ட்னர்ஷிப்பில் சேர்க்க முடியவில்லை.

இன்னும் நாங்கள் சிறிது சிறப்பாக பேட் செய்திருக்கலாம். நன்றாக விளையாடக்கூடிய வீரர்கள் நல்ல ஸ்டார்ட் கிடைத்ததும், அதை சதமாக மாற்ற முயல வேண்டும். முதல் போட்டிக்கும், 2-வது போட்டிக்கும் இதுதான் வித்தியாசம். ராகுல் சதம் நமக்கு மிகப்பெரிய ஸ்கோரைப் பெற்றுக்கொடுத்தது. எல்கரின் 96 ரன்கள்தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றியைக் காண்பித்தது.

ஹனுமா விஹாரி இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஆடினார், அதிலும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் அற்புதமாக இருந்தது. கடந்த காலங்களில் ஸ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக பேட் செய்துள்ளார். வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம் இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். விஹாரின் பேட்டிங் நம்பிக்கையளிப்பதாக அமைந்தது.

இந்தப் போட்டியை வைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள மாட்டோம், வெற்றி பெற வேண்டும். 240 ரன்கள் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் டிபெண்ட் செய்வது சாதாரணமானது அல்ல, மிகுந்த அதிர்ஷ்டம் இருந்தால்தான் டிபெண்ட் செய்ய முடியும்''.

இவ்வாறு திராவிட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x