Published : 17 Dec 2021 02:40 PM
Last Updated : 17 Dec 2021 02:40 PM

கோலிக்கும் கங்குலிக்கும் நல்லதல்ல: கபில் தேவ் அறிவுரை

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, விராட் கோலி | கோப்புப்படம்

புதுடெல்லி: பிசிசிஐயுடன் தனது அதிருப்தியைத் தெரிவித்த கோலிக்கும், பிசிசிஐ தலைவர் தலைவர் சவுரவ் கங்குலியின் பேச்சும் இருவருக்குமே நல்லதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு நாள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கும் முன் கலந்துபேசவில்லை, முன்னறிவிப்பின்றி நீக்கினர். ஒன்றரைமணி நேரத்துக்கு முன்புதான் என்னிடம் கேட்டார்கள். மேலும் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தபோது பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பதவியை விட்டுச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.

ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகும் முன் தானும், தேர்வுக் குழுவினரும் கோலியிடம் பதவியிலிருந்து விலக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம்” எனத் தெரிவித்தார்.

இருவரின் பேச்சிலும் முரண்பாடு இருந்ததால், பிசிசிஐ அமைப்புடன் கோலி நேரடியாக மோதலில் ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

விராட் கோலியின் பேச்சு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்டபோது, கருத்து கூற மறுத்துவிட்டார். ஆனால், பிசிசிஐ இதை முறைப்படி அணுகும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்த விவகாரத்தில் கங்குலி, கோலி இருவரும் மோதுவது இருவருக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்லதல்ல என அறிவுறுத்தியுள்ளார்.

தனியார் சேனலுக்கு கபில் தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நான் சொல்வது என்னவென்றால், பிசிசிஐ தலைவர் பிசிசிஐ தலைவர்தான். அதே நேரம் இந்திய அணியின் கேப்டனும் பெரியவர்தான். இருவரும் ஒருவருக்கொருவர் பொதுவெளியில் மோசமாகப் பேசிக்கொள்வது, சரியானது என நான் நினைக்கவில்லை. அது சவுரவ் கங்குலியாக இருக்கட்டும், விராட் கோலியாக இருக்கட்டும் இருவருக்குமே அது நல்லதல்ல.

விராட் கோலி சூழலைப் புரிந்துகொண்டு கட்டுப்பாட்டுடன் நடந்து நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தென் ஆப்பிரிக்கத் தொடருக்குப் புறப்படும் முன் கோலி இதுபோன்று பேட்டியளித்து சர்ச்சையாக்கிச் செல்வது சரியானது அல்ல. இந்த நேரத்தில் யாரையும் விரல் நீட்டிக் குற்றம் சாட்டுவதும் சரியானது அல்ல. தென் ஆப்பிரிக்கத் தொடர் வந்துவிட்டது. அதில் கவனம் செலுத்த வேண்டும்”.

இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x