Last Updated : 18 Nov, 2021 06:10 AM

 

Published : 18 Nov 2021 06:10 AM
Last Updated : 18 Nov 2021 06:10 AM

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி: எளிதான சேஸிங்கை கடினமாக்கி வென்ற இந்திய அணி: ரசிகர்களுக்கு பிரஷர் ஏற்றிய ரிஷப், ஸ்ரேயாஸ்

ரோஹித் சர்மா சிக்ஸருக்க பந்தை பறக்கவிட்ட காட்சி | படம் உதவி ட்விட்டர்

ஜெய்பூர்


ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வென்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்ெகட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நியூஸிலாந்துக்கு அணிக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி மவுண்ட்மவுங்கனியில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி கடைசியாக வென்றது.

அதன்பின் நடந்த ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20உலகக் கோப்பை என நியூஸிலாந்து அணிக்கு எதிராகத் தொடர்ந்து 7 தோல்விகளை இந்திய அணி சந்தித்தது. அந்த 7 தொடர் தோல்விகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரோஹித் படை.

இந்திய அணி அடுத்த மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தலைமைப் பயி்ற்சியாளர் ராகுல் திராவிட், கேப்டன் ரோஹித் சர்மா இருவர் தலைமையில் இந்திய அணி சந்திக்கும் முதல் தொடர் இதுவாகும். இருவருக்குமே இது முக்கியமான தொடராக இருப்பதால் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
40 பந்துகளில் 62 ரன்கள்(3சிக்ஸர், 6பவுண்டரி) குவித்த சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்திய அணியைப் பொறுத்தவரை சூர்யகுமார், ரோஹித்சர்மா இருவரும்தான் சேஸிங்கில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

புவனேஷ்வர் குமார் நீண்ட காலத்துக்குப்பின் நேற்று கட்டுக்கோப்பாகப் பந்துவீசி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டையும வீழ்த்தினார். டி20உலகக் கோப்பையிலும், ஐபிஎல் தொடரிலும் சொதப்பியபின் நேற்றைய பந்துவீச்சு ஓரளவுக்கு பரவாயில்லை ரகத்தில்தான் இருந்தது.

அஸ்வின் தனது தேர்வை எப்போதும் நியாயப்படுத்துகிறார். இந்த ஆட்டத்திலும் கட்டுக்கோப்பாக வீசிய அஸ்வின் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மற்ற வகையில் தீபக் சஹர், முகமது சிராஜ் இருவருமே ரன்களை வாரி வழங்கினர். கடைசி ஸ்பெல்லை மட்டும் இருவரும் ஒழுங்காக வீசினர் மற்றவகையி்ல் இருவரின் பந்துவீச்சும் சொல்லிக்கொள்வதுபோல் இல்லை.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் நேற்று அறிமுகமாகினார். ஆல்ரவுண்டரான வெங்கடேஷுக்கு ஒரு ஓவர் கூட வீச வாய்ப்பளிக்கவில்லை. தீபக் சஹர் ஓவரை சாப்மேன், கப்தில் வெளுத்துக்கட்டினர். சஹருக்கு ஒரு ஓவரைக் குறைத்து வெங்கடேஷுக்கு வழங்கியிருக்கலாம்.

அதேபோல ஹர்திக் பாண்டியா களமிறங்கும் இடத்தில் வெங்கடேஷை களமிறக்கி ேநற்று சோதித்தனர். இது தவறான முடிவு. சர்வதேச அனுபவம் ஏதும் இல்லாத வெங்கடேஷை, கடைசி ஓவரில் நெருக்கடியான நேரத்தில் ரன் அடிக்க வைப்பது நெருக்கடியில் தள்ளுவதாகும். இதில் ஒருவேளை வெங்கடேஷ் ரன் அடிக்க முடியாமல் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால், வெங்கடேஷ் வாழ்க்கையே வீணாகியிருக்கும்.

ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் இருவருமே நேற்று பேட்டிங்கில் சொதப்பினர். எளிதாகப் பெற வேண்டிய வெற்றியை, கடினமாக்கி, ரசிகர்களுக்கு பரிஷர் ஏற்றியதே இருவரும்தான். ஸ்ரேயாஸ் அய்யர் இன்னும் ஃபார்முக்கு வராத நிலையில் அவரை அணியில் வைத்திருப்பதற்கு பதிலாக, உள்நாட்டு போட்டிகளில் விளையாட அனுப்பி வைக்கலாம்.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் களத்தில் இருந்தனர். இருவருமே அனுபவமான பேட்ஸ்மேன்கள். ஆனால், ஐபிஎல் தொடரில் இருவருமே கேப்டன்ஷிப் சண்டையில் இருந்தார்களோ என்னமோ தெரியவில்லை. இருவருமே மேட்ச்வின்னிங்கிற்கான ரன்களை அடிக்கவில்லை.

பெர்குஷன் ஓவரையும், சவுதி ஓவரையும் இருவரும் தடவி, தடவி ரன் சேர்த்து ஆட்டத்தை நெருக்கடிக்குள் தள்ளினர். ஸ்ரேயாஸுக்கு பேட்டிங் மறந்துவிட்டதா அல்லது கேப்டன்ஷி பதவிதராத வருத்தத்தில் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியாமல் ஸ்ரேயாஸ் சிரமப்பட்டார்.

பெர்குஷன் வீசிய 18-வது ஓவரில் 5 ரன்களும், சவுதி வீசிய 19வது ஓவரில் 6 ரன்னும் இந்திய அணி சேர்த்து, ஸ்ரேயாஸ்(5) விக்கெட்டையும் இழந்தது.

கடைசி ஓவரை மிட்ஷெல் வீசினார். வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. சர்வதேச போட்டியில் தனது முதல்பந்தைச் சந்தித்த வெங்கடேஷ் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த பந்தில் ஸ்வீப் ஷாட் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அக்ஸர் படேல், ஒரு ரன்எடுக்க, ரிஷப் பந்த் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். ரிஷப் பந்த் 17 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

மிட்ஷெல் மட்டும் கடைசி ஓவரை லைன் லென்த்தில் வீசியிருந்தால் ரோஹித், சூர்யகுமார் உழைப்பு வீணாகியிருக்கும்.

கேஎல் ராகுல், ரோஹித் நல்ல தொடக்கம் அளித்தனர். 10 ரன்ரேட்டில் அணியைக் கொண்டு சென்று, 5 ஓவரில் 50 ரன்களை எட்ட வைத்தனர். ஆனால், சான்ட்னர் பந்துவீச்சில் ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 50 ரன்களும், பவர்ப்ளேயில் 56 ரன்களும் சேர்த்தனர்.

2-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், ரோஹித் இருவரும் ஜோடி சேர்ந்துதான் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர், 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 59 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 2 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு 48 ரன்னில்(36பந்து, 2சிக்ஸர்,5பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

சூர்யகுமார் யாதவ் நிதானத்துடனும், பொறுப்புடன் பேட் செய்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். 62 ரன்கள் சேர்த்த சூர்யகுமார், டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் போல்டாகினார். 144 ரன்கள்வரை 2 விக்ெகட்டை இழந்த இந்திய அணி அடுத்த, 16 ரன்களுக்குள் 3 விக்ெகட்டுகளை இழந்தது.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை வழக்கமான கேப்டன் வில்லியம்ஸன் இல்லாத நிலையில் சவுதி கேப்டன் பொறுப்பேற்றார். 164 ரன்கள் நல்லபடியாக டிபென்ட் செய்யக்கூடிய ஸ்கோர்தான், அதையும் நியூஸிலாந்து அணியினர் கடைசி ஓவர்வரைஆட்டத்தைச் எடுத்துச்சென்றனர்.

மிட்ஷெல் 18-வது ஓவரையும், பெர்குஷன் கடைசி ஓவரையும் வீசியிருந்தால், நிச்சயம் ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் மாறியிருக்கும். மிட்ஷெல் சிறந்த ஆல்ரவுண்டர், அனுபவமற்ற பந்துவீச்சாளர் இல்லை, 18-வது ஓவரின்போது 21 ரன்கள் இந்திய அணிக்கு தேவைப்பட்டது. ஆதலால் மிட்ஷெலை வீசச் செய்து, பெர்குஷனுக்கு கடைசி ஓவரை வழங்கியிருக்க வேண்டும். மற்ற வகையில் சவுதியின் கேப்டன்ஷி சிறப்பாகவே இருந்தது.

நியூஸிலாந்து அணியில் மிட்ஷெல் நடுவரிசையில் களமிறங்கி விளையாடக்கூடிய ஆல்ரவுண்டர் அவரை தொடக்கத்தில் களமிறக்கியதால், டக்அவுட்டில் புவனேஷ்வர் பந்துவீச்சில் வெளியேறினார். சாப்மேன், கப்தில் இருவரும் 2-வது விக்ெகட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர். சாப்மேன் 50 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 109 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அஸ்வின்வீசிய அதே ஓவரின் கடைசிப்பந்தில் பிலிப்ஸ் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. டிம் ஷீபெர்ட் 12, ரவிந்திரா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். கப்தில் 42 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர், 3பவுண்டரி அடங்கும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x