Last Updated : 09 Nov, 2021 08:13 AM

 

Published : 09 Nov 2021 08:13 AM
Last Updated : 09 Nov 2021 08:13 AM

'பை பை' கேப்டன் கோலி: டி20 உலகக் கோப்பையிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றது இந்திய அணி: நமிபியாவை நசுக்கியது

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி | படம் உதவி ட்விட்டர்

துபாய்


அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு, ரோஹித், ராகுலின் அதிரடி பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நமிபியா அணியை 9 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது இந்திய அணி

முதலில் பேட் செய்த நமிபியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. 133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 28 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 136 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப்-2 பிரிவில் 1.747 நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தில் இருந்தாலும், 6 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் போனது.

குரூப்-1 பிரிவி்ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் சமமான புள்ளிகள் பெற்றன, ஆனால் ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா வெளியேற்றப்பட்டது. ஆனால், குரூப்-2 பிரிவில் ரன் ரேட்டில் முதலிடத்தில் இந்திய அணி இருந்தாலும், புள்ளிக்கணக்கில் குறைவாக இருந்ததால் வெளியேற்றப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறிவி்ட்டோம் நமிபியாவுடனான இந்த ஆட்டம் ஒரு முறைக்காகத்தான் என்று தெரிந்திருந்தும், இந்திய அணியினர் வழக்கமான ஸ்பிரிட்டுடன் விளையாடி வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டியுடன் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிவிட்ட நிலையில் அவருக்கு சிறந்த பரிசாக இந்த வெற்றியை இந்திய அணியினர் வழங்கியுள்ளனர்.

விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரர், தனிவீரராக அணிக்கு வெற்றி தேடித்தரும் திறமை படைத்தவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தாரா என்பதிலும், ஐசிசி போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக இருந்தாரா என்பதில்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

அதிகமான போட்டிகள், 3 பிரிவுகளுக்கும் ஒரே கேப்டன், பேட்ஸ்மேனாக ஜொலிக்க வேண்டும், கேப்டனாக மிளர வேண்டும் என பல கடினமான சூழல்களுக்கு இடையே முள்கிரீடத்தை சுமந்துதான் கோலி களமாடினார். இப்போது கோலிக்கு கிடைக்கும் இந்த விடுபடுதல், நிச்சயம் அவரின் வின்டேஜ் கோலியின் ஆட்டத்துக்கு திரும்ப உதவியாக இருக்கும்.அந்த ஆட்டத்தைக் காணவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த உலகக் கோப்பைப் போட்டியோடு இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழஉள்ளன. கோலிக்கு மட்டும் கடைசிப் போட்டி அல்ல பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப்பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் விடைபெறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் வழிகாட்டலில் பயணித்து வந்த இந்திய அணி அடுத்ததாக ராகுல் திராவிட் என்ற மிக்பெரிய ஜாம்பவானின் கைபிடித்து செல்லப் போகிறது. இந்திய அணியில் நிகழப்போகும் மாற்றத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

நமிபியா அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீசிய ரவிந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இருவரும் சேர்ந்து 26 டாட் பந்துகளை வீசினர்.

ராகுல் சஹர் இந்தப் போட்டியி்ல்சேர்க்கப்பட்டு பந்துவீச வாய்ப்புப் பெற்றபோதிலும் நமிபியா அணிக்கு எதிராகக்கூட என்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 4 ஓவர்கள் வீசிய ராகுல் சஹர் 30 ரன்களை வழங்கினார்.

பும்ரா 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய பந்துவீச்சாளர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 58 டாட்பந்துகளை வீசினர், ஏறக்குறைய 10 ஓவர்களில் நமிபியா அணியை எந்த ரன்களையும் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர்.

தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தி பும்ரா தொடங்கிவைத்தார். அதை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட ஜடேஜா, அஸ்வின் இருவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி நமிபியா அணிக்கு நெருக்கடி அளித்தனர். நடுப்பகுதியில் அஸ்வின், ஜடேஜா, ராகுல் சஹர் மூவரும் சேர்ந்து நமிபியா அணியின் ரன்ரேட்டை ஒட்டுமொத்தமாக இழுத்துப் பிடித்தனர்.

133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர். நமிபியா அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் எவ்வாறு ரோஹித் சர்மா சமாளி்ப்பார் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால், பவுண்டரி,சிக்ஸர்களாக ரோஹித் சர்மா வெளுத்துவாங்கினார். கே.எல்.ராகுலும் தனது பங்கிற்கு பவுண்டரி சிக்ஸர்களா விளாசினார். பவர்ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்தது.

ரோஹித் சர்மா 31 பந்துகளில் அரைசதத்தையும், ராகுல் 35 பந்துகளில் அரைசதத்தையும் நிறைவு செய்தனர். ரோஹித் சர்மா 57 ரன்கள்(2சிக்ஸர்,7பவுண்டரி) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 86 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்து சூர்யகுமார் யாதவ், ராகுலுடன் சேர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.ராகுல் 54 ரன்களுடனும், சூர்யகுமார் 25 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நமிபியா அணியைப் பொறுத்தவரை இந்த டி20 உலகக் கோப்பைப்போட்டியில் நெதர்லாந்து, அயர்லாந்து,ஸ்காட்லாந்தை வீழ்த்தி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ஆஸ்திேரலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நேரடியாக விளையாடத்தகுதி பெற்றது அந்த அணிக்கு கிடைத்த கவுரவமாகும். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த அனுபவத்துடன் அடுத்த ஆண்டு இன்னும் வலிமையான அணியாக நமிபியா வரும் என்று எதிர்பார்க்கலாம்.

நமிபியா அணியில்அதிகபட்சமாக டேவிட் வீஸ்(26), ஸ்டீபன் பார்ட்(21) ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சர்வதேச தரத்திலான இந்திய அணியின் பும்ரா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நமிபியா பேட்ஸ்மேன்கள் திணறி வி்க்கெட்டுகளை இழந்தனர். கட்டுக்கோப்பாக, லைன் லென்த்தில் வீசிய ஜடேஜா, அஸ்வின் பந்துவீச்சையும் எதிர்கொள்ள முடியாமல் நமிபியா பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். இந்திய பந்துவீச்சாளர்ளுக்கு கடைசி நேரத்தில் ஒரு பயிற்சி ஆட்டமாக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x