Published : 28 Aug 2021 03:12 AM
Last Updated : 28 Aug 2021 03:12 AM
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் 4-வது நாளான நேற்று மகளிருக்கான டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பவினாபென் படேல், பிரேசிலின் ஜாய்ஸ் டி ஆலிவியராவை எதிர்த்து விளையாடினார். இதில் பவினாபென் படேல் 12-10, 13-11, 11-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மாலையில் நடைபெற்ற கால் இறுதி சுற்றில் பவினாபென் படேல், நடப்பு சாம்பியனான செர்பியாவின் போரிஸ்லாவா பெரிக் ராங்கோவிச்சை எதிர் கொண்டு 11-5, 11-6, 11-7 என்ற நேர் செட்டில் வென்று அரை இறுதி சுற்றி கால்பதித்தார்.
அரை இறுதி சுற்றில் பவினா பென், சீனாவின் ஜாங் மியாவோவுடன் இன்று மோதுகிறார். அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் வெண் கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா பென். ஏனெனில் அரை இறுதியில் தோல்வி அடைபவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப் படும்.
இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸில் பதக்கம் கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைக்க உள்ளார்.
ஆடவருக்கான குண்டு எறிதல் எஃப் 55 பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் தேக் சந்த் 9.04 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். பிரேசில் நாட்டின் வாலஸ் சான்டோஸ் 12.63 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.பளுதூக்குதலில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சகினா கதூன் 93 கிலோ எடையை தூக்கி 5வது இடம் பிடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT