Published : 25 Aug 2021 03:15 AM
Last Updated : 25 Aug 2021 03:15 AM
ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு கோலாகலமாகத் தொடங்கியது. செப். 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. வண்ணமயமாக நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த் ஏந்திச் சென்றார்.
2020-ம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக கோடைகால ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் நேற்று போட்டிகள் தொடங்கின. பாராலிம்பிக்ஸ் போட்டியை கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், லேசர் ஜாலங்களுடன் ஜப்பான் பேரரசர் நருஹிதோ தொடங்கி வைத்தார். அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் கணவர்டக்ளஸ் எம்ஹாஃப், சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்உள்ளிட்டோரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
தொடக்க விழா அணி வகுப்பில்தேசிய கொடியை மாரியப்பன் ஏந்திச் செல்வதாக இருந்தது. ஆனால் டோக்கியோ விமான பயணத்தின் போது மாரியப்பனுடன் அருகில் அமர்ந்து பயணம் செய்தவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மாரியப்பன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 5 இந்திய பாரா தடகள வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 6 நாட்களில் இவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தஅறிவிப்பு வரும் வரை மாரியப்பன்உள்ளிட்ட 6 பேரும் தனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாரியப்பன் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரரானதேக் சந்த், இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். அணிவகுப்பில் இந்தியா 17வது வரிசையில் இடம் பிடித்திருந்தது.
செப்.5-ம் தேதி வரை நடைபெறஉள்ள டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் இருந்து 54 பேர்கொண்ட குழு, 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றன. பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் இருந்து அதிக வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும். ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜஹாரியா, உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன், பாட்மிண்டனில் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரமோத் பகத், சுஹாஸ் யதிராஜ், டேக்வாண்டோ மகளிர் பிரிவில் அருணாதன்வர், துப்பாக்கி சுடுதலில் ரூபினா பிரான்ஸிஸ் ஆகியோர் உறுதியாக பதக்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பாா்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெறவுள்ளன. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,403வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 2,550 வீரர்கள், 1,853 வீராங்கனைகள், 22 விளையாட்டு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில், 539 பதக்கங்களுக்காக பலப்பரீட்சை நடத்துகின்றனர். பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் அதிக வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT