Published : 04 Feb 2016 03:11 PM
Last Updated : 04 Feb 2016 03:11 PM
தற்போதைய இந்திய டி20 அணி சமபலத்துடன் திகழ்வதால் உலகக்கோப்பை டி20-யில் சாம்பியனாக அதிக வாய்ப்புள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சச்சின் மேலும் கூறியதாவது:
நம் அணிக்கு நல்ல வாய்ப்புள்ளது. டி20-யில் மூத்த வீரர்கள் சிலருடன் நம் அணி சமபலத்துடன் திகழ்கிறது. மேலும் புதிதான இளம் வீரர்களும் இவர்களுடன் இணைந்து நன்றாக விளையாடி வருகின்றனர்.
ஜஸ்ப்ரீத் பும்ரா ஆஸ்திரேலியாவில் பந்துவீசியதை கவனித்தோமானால், அவர் எவ்வளவு சிறப்பாக வீசினார் என்பது தெரியவரும். அதே போல் ஆஷிஷ் நெஹ்ரா மீண்டும் அணிக்குள் வந்திருப்பதும் அருமையான விஷயம். யுவராஜ் வந்துள்ளார், ஹர்பஜன் இருக்கிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து நல்ல அணிச்சேர்க்கை உருவாகியுள்ளது. இந்த அணியுடன் இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் அளவுக்குச் செல்லும் வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அற்புதமாக ஆடினர். ஆனால் கடைசி போட்டியின் கடைசி பந்தையே பார்க்க முடிந்தது. நான் அப்போதுதான் வீட்டுக்கு வந்தேன், என் மனைவியும், மகனும் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ‘கடைசி பந்து 2 ரன்கள் எடுத்தால் வெற்றி’ என்று கூறி என்னையும் பார்க்குமாறு அழைத்தனர்.
அந்த ரன்களை நிச்சயம் நாம் எடுப்போம் என்று கூறினேன், அதேபோல் ரெய்னா பாயிண்டிற்கு மேல் அருமையான அந்த ஷாட்டை அடித்தார்.
இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT