Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

ஒலிம்பிக் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய பி.வி.சிந்துவுக்கு பாராட்டு

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார் சிந்து.

இந்நிலையில் டோக்கியோவில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி திரும்பினார் பி.வி.சிந்து. அவரை, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலையபணியாளர்கள் கை தட்டி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜய் சிங்கானியா மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பி.வி.சிந்து கூறும்போது, “நான் மிகவும்மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன், எல்லோரும் என்னை வாழ்த்தினார்கள். இந்திய பாட்மிண்டன் சங்கம் மற்றும் என்னை ஆதரித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.இது ஒரு உற்சாகமான நாள் மற்றும் மகிழ்ச்சியான தருணம்” என்றார்.

இதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x