Published : 01 Aug 2021 06:28 AM
Last Updated : 01 Aug 2021 06:28 AM
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பாட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் அமித் பங்கால் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவின் 9-வது நாளான நேற்று மகளிருக்கான வட்டு எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தனது 3-வது முயற்சியில் 64 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான ஹாக்கி ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி தனது கடைசிலீக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வந்தனா கட்டாரியா 3 கோல்களும் நேகா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதனால் இந்திய மகளிர் அணி லீக் சுற்றில் 4-வது இடம் பிடித்து கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறத் தவறினர்.
ஆடவருக்கான குத்துச்சண்டை யில் பிளைவெயிட் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் அமித் பங்கால் 1-4 என்ற கணக்கில் கொலம்பியாவின் ஹெர்னி மார்டினெஸிடம் தோல்வியடைந்தார். ஆடவருக்கான வில்வித்தையில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அதானு தாஸ் 4-6 என்ற கணக்கில் ஜப்பானின் ஃபுருகவாவிடம் வீழ்ந்தார்.
பாட்மிண்டனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபேவின் தை சூ-யிங்கை எதிர்கொண்டார். இதில் சிந்து 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். அரை இறுதியில் தோல்வியடைந்த சிந்து, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவுடன் மோதுகிறார். மகளிருக்கான மிடில்வெயிட் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி கால் இறுதிச் சுற்றில் 0-5 என்ற கணக்கில் சீனாவின் கியான் லியிடம் தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT