Published : 24 Jul 2021 05:03 PM
Last Updated : 24 Jul 2021 05:03 PM

அந்த நடுவரிசை வீரருக்கு ஒருநாள் போட்டியில் இனிமேல் வாய்ப்பு கிடைக்காது: வறுத்தெடுத்த சேவாக்

ஹர்திக் பாண்டியாவுக்கும், மற்றொரு நடுவரிசை வீரருக்கும் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்றே நினைக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் விளாசியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலிரு போட்டிகளை வென்ற இந்திய அணி, நேற்று நடந்த கடைசிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கடைசி ஆட்டத்தில் இந்திய அணியில் 6 மாற்றங்கள், 5 வீரர்கள் அறிமுகமாயினர். ஆனால், பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் வகையில் யாரும் விளையாடவில்லை. சேத்தன் சக்காரியா, ராகுல் சஹர் ஓரளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தத் தொடர் முழுமைக்கும் பார்த்தால் இஷான் கிஷன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் சிறப்பாக இருந்துள்ளது. ஆனால், இருவரின் விளையாட்டு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. குறிப்பாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நடுவரிசை பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே இருவரும் தங்கள் மீதான நம்பிக்கையைக் கெடுத்துக்கொண்டனர். இருவருக்கும் 3 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைத்தும் சராசரியாக 20 ரன்களுக்குள்தான் சேர்த்தனர். மணிஷ் பாண்டே 3 போட்டிகளிலும் முறையே 26,11,37 ரன்கள்தான் சேர்த்தார்.

இதைத்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக்கும் குறிப்பிட்டு இருவரையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

இணையதளம் ஒன்றுக்கு சேவாக் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியாவுக்குத்தான் இந்தத் தொடரில் அதிகமான வாய்ப்பு கிடைத்தது. இருவரும் 3 ஆட்டங்களிலும் விளையாடினர். ஆனால், இருவரும் சராசரியாக 20 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்யாதது வேதனைக்குரியது.

இந்த 3 போட்டிகளிலும் அதிகமான பலன் பெற்றது யார் எனக் கேட்டால் அது பாண்டேதான். 3 போட்டிகளிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. சூழல் பெரிய சவாலாக இல்லாத நிலையிலும்கூட பாண்டேவால் சிறப்பாக விளையாட முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரை பாண்டேவின் பேட்டிங் என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இனிமேல் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, பாண்டே இருவரும் எளிதாக ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு பெறமாட்டார்கள். ஹர்திக் பாண்டியாவுக்குக்கூட கிடைக்கலாம். ஆனால், மணிஷ் பாண்டே நீண்டகாலத்தில் திறமையை நிரூபித்தால்தான் அணிக்குள் வரமுடியும்.

ஆனால், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் நடுவரிசைக்கு ஏற்ற பேட்ஸ்மேன்கள் என்பதை நிரூபித்துள்ளனர். ஒரு வீரர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிவந்தால், அவரால் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்பதற்கு பிரித்வி ஷா உதாரணம். சில நேரங்களில் போட்டியைச் சரியாகக் கணிக்காவிட்டால் தவறு நடக்கலாம். அது பிரித்விஷா பேட்டிங்கில் இருந்தது. 3 ஆட்டங்களிலும் அரை சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார். பந்தைச் சரியாகக் கணித்து பொறுமையாக ஆடியிருந்தால் அரை சதங்கள் அடித்திருக்கலாம்''.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x