Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து, அதை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் ரவி சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று (மே 27).
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் தலா 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்ததுடன், தலா 100 விக்கெட்களுக்கு மேல் எடுத்த சாதனையை ஒருசில வீரர்கள்தான் படைத்துள்ளனர். அப்படி சாதனை படைத்த வீரர்களில் ஒருவர் ரவி சாஸ்திரி.
1962-ம் ஆண்டு மும்பையில் பிறந்த ரவி சாஸ்திரி, அங்குள்ள டான் பாஸ்கோ பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தார். பிற்காலத்தில், தனது கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் ரவி சாஸ்திரி இடம்பெற்றிருந்தார். 1980-ம் ஆண்டில் மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடிய ரவி சாஸ்திரி, இத்தொடரில் அதிக விக்கெட்களை எடுத்ததன் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 1981-ல் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் வெறும் சுழற்பந்து வீச்சாளராகத்தான் ரவி சாஸ்திரி இருந்துள்ளார். பின்னர் தொடக்க பேட்ஸ்மேனாகவும் மாறினார். இந்திய பேட்ஸ்மேன்களில் யுவராஜ் சிங்குக்கு முன்னதாகவே ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த சாதனை ரவி சாஸ்திரிக்கு உண்டு. பரோடா அணிக்கு எதிரான உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் திலக் ராஜ் என்ற பந்துவீச்சாளரின் ஓவரில் 6 பந்துகளிலும் சாஸ்திரி சிக்ஸரை விளாசினார். இது உள்ளூர் போட்டி என்பதால் அதிக கவனத்தைப் பெறாமல் போய்விட்டது. தற்போது கிரிக்கெட் வீரராக ஓய்வு பெற்றாலும், ஒரு பயிற்சியாளராக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ரவி சாஸ்திரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT