Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM
கிரிக்கெட் பேட்கள் (மட்டைகள்) பெரும்பாலும், ‘வில்லோ’ என்ற மரத்தில் இருந்து செய்யப்படுகின்றன. இந்தச் சூழலில் வில்லோ மரத்துக்கு பதிலாக மூங்கில்களில் கிரிக்கெட் பேட்களை செய்யலாம் என்ற ஆலோசனை எழுந்துள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரும், 19 வயதுக்கு உட்பட்ட தாய்லாந்து கிரிக்கெட் அணியின் வீரராக இருந்தவருமான டாக்டர் தர்சில் ஷா என்பவர் சமீபத்தில் தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கையில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.
“மூங்கிலால் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்கள், தூக்குவதற்கு எளிதாக இருக்கும். இதை பேட்ஸ்மேன்கள் எளிதாக சுழற்றலாம். இந்த வகை பேட்களை வைத்து ஸ்வீப்பிங் ஷாட்களை எளிதாக அடிக்கலாம். இதில் அடிக்கும் பந்துகள் வேகமாக பவுண்டரியை நோக்கி நகரும்” என்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார் தர்சில் ஷா.
இந்த ஆய்வறிக்கையை அப்படியே நம்பாமல், மூங்கிலால் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்களை வைத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கிரிக்கெட் ஆடிப் பார்த்துள்ளனர். இதில் வில்லோ மரத்தால் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்களை விட மூங்கிலால் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்கள் 22 சதவீதம் அதிக உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அதைத் தூக்கி சுழற்றுவதும் எளிதாக இருப்பதாக அதை வைத்து கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பேட்ஸ்மேன்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த பேட்கள், அதிக ரன்களை குவிக்க உதவுவதால், அது பந்துவீச்சாளர்களுக்கு சாபமாக மாறுமோ என்ற கண்ணோட்டத்திலும் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும், இந்த புதிய வகை பேட்களுக்கு கிரிக்கெட் விதி ஒன்றும் பெரும் சவாலாக உள்ளது. அதன்படி, கிரிக்கெட் பேட்கள் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் மூங்கிலை ஒருவகை புல்லாகத்தான் இதுவரை வகைப்படுத்தி வைத்துள்ளனர் என்பதே அந்த சவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT