Published : 16 Apr 2021 03:11 AM
Last Updated : 16 Apr 2021 03:11 AM
விம்பிள்டன் மற்றும் அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வென்று கறுப்பின மனிதர்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் அர்தர் ஆஷ். டென்னிஸ் உலகின் ராஜாவாக சில காலம் கொடிகட்டிப் பறந்த அர்தர் ஆஷ், அவ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற நாள் ஏப்ரல் 16.
1943-ம் ஆண்டு, ஜூலை 10-ம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் ஒரு கறுப்பின குடும்பத்தில் அர்தர் ஆஷ் பிறந்தார். அவரின் சிறு வயதிலேயே அம்மா இறந்துவிட்டதால், அவரும் அவரது சகோதரரும் அப்பாவால் வளர்க்கப்பட்டனர். மிகவும் கண்டிப்பானவரான அர்தர் ஆஷின் தந்தை, தனது மகன் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்பினார். இதற்காக ஆஷை முதலில் கால்பந்து பயிற்சிக்கு அனுப்பினார். ஆனால் ஆஷுக்கு பிடித்த விளையாட்டாக டென்னிஸ் இருந்தது.
தனது 7 வயதில் அர்தர் ஆஷ் சிறப்பாக டென்னிஸ் ஆடுவதைப் பார்த்து, ராபர்ட் வால்டர் ஜான்சன் என்பவர் அவருக்கு பயிற்சியளிக்க முன்வந்தார். அவர் அளித்த சிறப்பான பயிற்சியின் உதவியால் 1958-ம்ஆண்டில் நடந்த மேரிலாண்ட் பாய்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் இப்போட்டியில் பங்கேற்ற முதல் கறுப்பினச் சிறுவன் என்ற பெருமையைப் பெற்றார். இதைத்தொடர்ந்து பல உள்ளூர் போட்டிகளில் வெற்றிபெற்ற அர்தர் ஆஷ், சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலும் அசத்தத் தொடங்கினார். 1968-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அர்தர் ஆஷ், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்தார்.
இதன்மூலம் இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வென்ற முதல் கறுப்பின வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 1980-ம் ஆண்டில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற அர்தர் ஆஷ், 1992-ம் ஆண்டில் எய்ட்ஸ் நோயால் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT