Published : 30 Dec 2015 08:47 AM
Last Updated : 30 Dec 2015 08:47 AM

ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: சானியா மிர்சா உற்சாகம்

ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.

பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்த ஆண்டு 10 சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் சானியா மிர்சா. இதன்மூலம் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருக்கும் சானியா மிர்சா, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸில் நானும் மார்டினா ஹிங்கிசும் நம்பர் ஒன் ஜோடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்பர் ஒன் என்ற இடத்தைப் பெறுவது எப்படி சவாலானதோ, அதேபோல் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வதும் சவாலான விஷயம். நானும் மார்டினா ஹிங்கிசும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் உதவிகரமாக இருக்கிறோம். அந்த வகையில் அடுத்த ஆண்டும் எங்கள் முதல் இடத்தை தக்கவைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

2014-ல் நான் 5 டபிள்யூடிஏ பட்டங்களை வென்றேன். அப்போது அதுதான் டென்னிஸ் போட்டியில் என் சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால் இந்த ஆண்டு அதைவிட வெற்றிகரமாக அமைந்தது. இதைவிட சிறப்பாக அடுத்த ஆண்டில் வெற்றிகளை பெறுவது கடினம் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் இந்த ஆண்டைவிட அதிக வெற்றிகளைக் குவிக்க முயற்சி செய்வேன்.

கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த நான், தற்போது மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளேன். அடுத்த மாதம் நடக்கவுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக சில போட்டிகளில் ஆடவுள்ளேன்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதில் வெற்றிபெற விரும்புகிறேன். என் உடல் அனுமதிக்கும் வரை சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்வேன்.

தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதால் நான் சில விஷயங்களை இழந்துள்ளேன். குறிப்பாக என் பெற்றோரை விட்டு பிரிந்திருக்க வேண்டி உள்ளது. சில முக்கியமான திருமண நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நம்பர் ஒன் என்ற இடத்தைப் பிடிக்க சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும். இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.

தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதால் நான் சில விஷயங்களை இழந்துள்ளேன். குறிப்பாக என் பெற்றோரை விட்டு பிரிந்திருக்க வேண்டி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x