Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM
இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை பேட்டிங்கின் முக்கிய தூணாக இருந்தவர் திலிப் வெங்சர்க்கார். அவர் புகழின் உச்சத்தில் இருந்தபோது, விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்காக துபாயில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நாள் ஏப்ரல் 1.
1982-ம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா லெவன் அணிக்கும், இன்திகாப் ஆலம் தலைமையிலான பாகிஸ்தான் லெவன் அணிக்கும் இடையேயான ஒருநாள் காட்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, துபாய் சென்றது. அந்நாட்டின் விதிப்படி, விமான நிலையத்தில் மற்ற பயணிகளைப்போல், கிரிக்கெட் வீரர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் சக பயணிகளுடன் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அப்போது அதே வரிசையில் இருந்த சில சினிமா நட்சத்திரங்களை முதலில் பரிசோதித்து அனுப்பியுள்ளனர் சுங்கத் துறை அதிகாரிகள். கிரிக்கெட் வீரர்கள் அப்போது அத்தனை பிரபலமானவர்களாக இல்லாததால் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டனர்.
இயல்பாகவே கொஞ்சம் கோபக்காரரான திலிப் வெங்சர்க்காருக்கு இது பிடிக்கவில்லை. அதனால் அவர் சுங்கத் துறை அதிகாரிகளை கடும் சொற்களால் விமர்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுங்கத் துறை அதிகாரி, அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியேறாமல் தடுத்ததுடன், இந்தியாவுக்கு அவரை திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தச் சூழலில் கவாஸ்கர் உட்பட எந்த வீரர்களும் வெங்சர்க்காருக்காக பரிந்து பேசவில்லை.
துபாயில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதை விட, தனக்காக யாரும் பரிந்து பேசாதது வெங்சர்க்காருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணிக்காக ஆடினாலும், பல காலம் மற்ற வீரர்களிடம் இருந்து தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். அத்துடன் கவாஸ்கருக்கும் வெங்சர்க்காருக்கும் இடையே தனிப்பட்ட பகையும் மூண்டது. அந்த பகை இன்னும் நீடிப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT