Last Updated : 15 Dec, 2020 04:52 PM

 

Published : 15 Dec 2020 04:52 PM
Last Updated : 15 Dec 2020 04:52 PM

ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டார் ரோஹித் சர்மா: 3-வது டெஸ்ட்டிலிருந்து களமிறங்குகிறார்

இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா: கோப்புப் படம்.

புதுடெல்லி

காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா உடற்தகுதி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலையில் அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் ரோஹித் சர்மா, அதன்பின் இந்திய அணியில் இணைந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விளையாடுவார்.

ஐபிஎல் தொடரின்போது ரோஹித் சர்மாவுக்குத் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில், கடைசி நேரத்தில் சில போட்டிகளில் விளையாடாமல் ரோஹித் சர்மா இருந்தார்.

அதன்பின் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை ஆய்வு செய்த இந்திய அணியின் மருத்துவக் குழுவினர், அவருக்கு ஓய்வு தேவை என்று பிசிசிஐ தேர்வுக் குழுவிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆஸி.க்கு எதிரான ஒருநாள், மற்றும் டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், டெஸ்ட் தொடருக்குள் ரோஹித் சர்மாவின் உடல்நிலை குணமடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் அவரை டெஸ்ட் அணிக்கு மட்டும் தேர்வு செய்தனர்.

அதுமட்டுமல்லாமல், ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், விராட் கோலி, தனது மனைவியின் பிரசவத்துக்காக நாடு திரும்புகிறார். இதனால் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடமாட்டார். இதை ஈடுகட்டும் வகையில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, உடற்தகுதி மற்றும் பயிற்சிக்காக கடந்த மாதம் 19-ம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ரோஹித் சர்மா வந்தார். அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உடற்தகுதிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தப் பரிசோதனையில் ரோஹித் சர்மா தேறிவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மாவை விளையாட வைக்க முதலில் பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், ரோஹித் சர்மா ஆஸி. சென்று தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள 14 நாட்கள் தேவை. அதன்பின் பயிற்சி தேவைப்படும் என்பதால், 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் மட்டும் களமிறக்க முடிவு செய்யப்பட்டது.

உடற்தகுதி பெற்ற ரோஹித் சர்மா இன்று அதிகாலை துபாய் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x