Last Updated : 22 Oct, 2015 09:15 AM

 

Published : 22 Oct 2015 09:15 AM
Last Updated : 22 Oct 2015 09:15 AM

அமித் மிஸ்ராவை கைது செய்ய போலீஸ் திட்டம்

பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா தனது தோழியை தாக்கியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட‌த்தி வருகின்றனர். இவ்வழக்கில் 7 நாட்களுக்குள் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது:

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த செப்டம்பர் 25-ம் தேதி பெங்களூருவில் எம்.ஜி. சாலையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது பெண் தோழியை சந்தித்துள்ளார்.

அப்போது அமித் மிஸ்ரா பெண் தோழியை தகாத வார்த்தைகளில் திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் அசோக் நகர் போலீஸில் அமித் மிஸ்ரா பாலியல் ரீதியாக தன்னை தாக்கியதாக கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அமித் மிஸ்ரா மீது பெண்ணை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்னும் 7 நாட்களுக்குள் அசோக் நகர் காவல் நிலையத்தில் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது பதிவு செய்யப் பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை யின் நகல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் அமித் மிஸ்ரா ஆஜராகாவிட்டால், அவரை கைது செய்து விசாரிப்போம். சட்டப்படி அமித் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எந்த தடையும் இல்லை'' என்றார்.

அமித் மிஸ்ரா தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x