Last Updated : 18 Oct, 2020 02:18 PM

 

Published : 18 Oct 2020 02:18 PM
Last Updated : 18 Oct 2020 02:18 PM

வருகிறார் சுனில் நரேன்: ஐபிஎல் நிர்வாகத்தின் பந்துவீச்சு ஆய்வுக் குழு ஒப்புதல்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேன் : கோப்புப்படம்

அபு தாபி,


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் தெரிவித்த நிலையில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அவரின் பந்துவீச்சுக்கு ஐபிஎல் நிர்வாகம் தொடர்ந்து பந்துவீச ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சுனில் நரேனின் பெயர் நீக்கப்பட்டது.
கடந்த 11-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேன் பந்துவீசிய விதம் ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாகக் கூறி களநடுவர் உலஹாஸ் காந்தி, கிறிஸ் கஃபானே இருவரும் ஐபிஎல் அமைப்பிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, ஐசிசி நிர்வாகம் சுனில் நரேனின் பந்துவீச்சை எச்சரி்க்கை பட்டியலில் வைத்தது. மறுபடியும் புகார் வந்தால், நரேன் பந்துவீச போட்டித் தொடர் முழுவதும் தடைவிதிக்கப்படும் எனத் தெரிவித்தது. ஆனால், பந்துவீசவும் தடையில்லை என்று தெரிவித்தது.

இதையடுத்து, அடுத்த இரு போட்டிகளுக்கு சுனில் நரேன் களமிறங்கவில்லை.ஐசிசி பந்துவீச்சு ஆய்வுக்குழுவுக்குச் சென்று தனது பந்துவீச்சின் முறைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் சுனில் நரேனின் பந்துவீச்சு குறித்த அனைத்து விதங்களையும், ஐசிசி பந்துவீச்சுஆய்வுக் குழு ஆய்வு செய்தது.அதில் எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லை. தொடர்ந்து போட்டிகளில் பந்துவீசலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் “ கொல்கத்தா நைட் ரைடர் வீரர் சுனில் நரேனின் பந்துவீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் அதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று ஐபிஎல் பந்துவீச்சு ஆய்வுக்குழு உறுதி செய்துள்ளது.

சுனில் நரேன் அளித்த அனைத்து வீடியோ காட்சிகளையும் கவனத்துடன் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சுனில் நரேனின் முழங்கை மடங்கும் அளவு, ஐசிசி விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறது. ஆதலால், அவர் பந்துவீசுவதற்கு தடையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு கொல்கத்தா அணிக்கும், சுனில் நரேனுக்கும் மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும். சுனில் நரேனின் வருகை அந்த அணிக்கு இன்னும் கூடுதல்பலத்தை அளிக்கும். இன்று நடக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் நரேன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுனில் நரேன் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு சாம்பியன்லீக் டி20 போட்டியில் நரேன் பந்துவீ்ச்சில் சந்தேகம் எழுந்ததால் புகார் செய்யப்பட்டது. இதனால் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் நரேன் பந்துவீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் நரேன் பந்துவீச்சு மீது நடுவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பந்துவீச நரேனுக்குத் தடை விதிக்கப்பட்டது.

அதன்பின் தனது பந்துவீச்சில் மாற்றம் செய்து, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிசியின் அனுமதியை நரேன் பெற்றார். இருப்பினும் 2016-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் நரேன் பங்கேற்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கிலும் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்து நடுவர்கள் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x