Published : 03 Oct 2020 07:46 AM
Last Updated : 03 Oct 2020 07:46 AM

நிறைய பந்துகளை என்னால் ‘மிடில்’ செய்ய முடியவில்லை: ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகு தோனி ஒப்புதல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி தலைமை சிஎஸ்கே அணி நேற்று ஐபிஎல் 2020 தொடரில் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்தது.

180 - 190 என்றால் தோனி சம இலக்குக்கு அதிகம் அதனால் நெட் ரன்ரேட்டுக்கு ஆடினோம் என்று சமாதானம் சொல்வார், ஆனால் 165 ரன்கள் இரு அணிகளுக்குமே சம இலக்கு என்பதை ஒப்புக் கொண்டால் நெட் ரன் விகிதத்துக்கு ஆட முடியாது வெற்றிக்குத்தான் ஆட முடியும். சரி! நெட் ரன் ரேட் என்பது வெற்றிகளில் ஏற்படும் சிலபல ஓட்டைகளை அடைக்கப் பயன் படுமே தவிர வெற்றியே பெறாமல் நெட் ரன்விகிதம் மட்டுமே அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு போய் விடும் என்று நிச்சயம் தோனி நம்பமாட்டார் என்று நாம் நம்புவோம்.

165 ரன்கள் இலக்கை எதிர்த்து 157 என்பது போட்டியை பார்க்காதவர்களுக்கு அடடே 8 ரன்களில் கோட்டை விட்டார்களே என்பார்கள். ஆனால் ஆட்டம் பவர் ப்ளேயிலேயே முடிந்து விட்டது என்பதுதான் எதார்த்தம்.

எந்த இலக்காக இருந்தாலும் கடைசியில் நான் சிக்சர்களாக அடித்து நொறுக்கி ‘பினிஷ்’ செய்து விடுவேன் என்ற தோனியின் டெம்ப்ளேட் மாடல் சர்வதேச கிரிக்கெட்டிலேயே அவருக்கு கடைசி 2 ஆண்டுகளாக கைகூடவில்லை என்பதே உண்மை. அப்படியிருக்கையில் திவேட்டியா போன்ற வீரர்களெல்லாம் காட்ரெல் போன்ற பவுலர்களை 5 சிக்சர்கள் விளாசும் போது, எப்போது வேண்டுமானாலும் சிக்ஸ் அடிப்பேன் என்ற (அதீத) நம்பிக்கை கொண்ட தோனி பெரும்பாலான இன்னிங்ஸ்களில் பந்துக்குஒரு ரன் என்ற விகிதத்தில் கூட எடுக்க முடியாமல் கடைசியில் திக்கித் திணறுவது அவர் தன் பேட்டிங் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறது என்றே அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதமே இல்லாதவர் கடைசியில் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் தோனி தன்னால் நிறைய பந்துகளை மிடில் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது: “என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்ய முடியவில்லை. பந்தை அடித்து நொறுக்க வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம்.

பிட்ச் மந்தமாக இருக்கும் போது பந்தை ‘டைம்’ செய்து ஆடுவதுதான் சிறந்தது. ஆனால் அவுட் ஃபீல்டைப் பார்க்கும் போது நம் உள்ளுணர்வு என்ன கூறுகிறது என்றால் பந்தை வலுவாக அடிக்க வேண்டும் என்கிறது.

நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. தொழில்நேர்த்தியுடன் ஆடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது கேட்ச்களை எடுக்க வேண்டும், நோ-பால்கள் வீசக்கூடாது. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடியவைதான்.

ரிலாக்ஸாக இருக்கிறோம் அதனால் செய்த தவறுகளையே மீண்டும் செய்கிறோம் என்று நினைக்கிறேன். பேட்ஸ்மென்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து வீச வேண்டும், அதாவது நம்மை நன்றாக அடித்தால்தான் அவர் ரன் எடுக்க முடியும் என்ற இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும்.

16வது ஓவருக்குப் பிறகு செய்த தவறையே செய்தோம். ஒட்டுமொத்தமாக இன்னும் ஆட்டத்திறன் மேம்பட வேண்டும்.

யாரும் வேண்டுமென்றே கேட்சை விட மாட்டார்கள். ஆனால் இந்த மட்டத்தில் ஆடும்போது, கேட்ச்களை எடுத்தே தீர வேண்டும் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும். குறிப்பாக அணி சரியாக ஆடாத போது கேட்ச்கள் தான் நமக்கு வழிகாட்டும்.

இப்படி கேட்ச்களை நாக் அவுட் கட்டத்தில் விட்டால் என்ன ஆகும்? நாக் அவுட் கட்டத்தில் கேட்ச்களை விட மாட்டோம் என்று கூற முடியாது. எனவே நாம் தொழில்பூர்வமாக சிறப்பான பங்களிப்பை இந்த விஷயத்தில் செய்ய வேண்டும்.

இந்த சூழ்நிலையில் தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. இவை அறிகுறியாக இருக்கும் போது நாம் டைம் எடுத்து ஆடுவதுதான் நல்லது, மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். ” என்றார் தோனி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x