Last Updated : 02 Oct, 2020 12:43 PM

 

Published : 02 Oct 2020 12:43 PM
Last Updated : 02 Oct 2020 12:43 PM

ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மா புதிய மைல்கல்: கோலி, ரெய்னாவுடன் சாதனைப் பட்டியலில் இணைந்தார்

ஐபிஎல் டி20 வரலாற்றில் மும்பைஇந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை நேற்று எட்டி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னாவுடன் சாதனையாளர்கள் வரிசையில் இணைந்தார்.

அபு தாபியில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் 13-வதுலீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது.

192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா முதலாவது கவர் டிரைவ் ஷாட் அடித்தபோது, ஐபிஎல் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

191 போட்டிகளில் ஆடிய ரோஹித் சர்மா ஐபிஎல் 5,000 ரன்களை நேற்று கடந்தார். ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா இதுவரைஒரு சதம் 37 அரைசதங்களை அடித்துள்ளார். 200 சிக்ஸர்களை அடித்த 4 முக்கிய வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர்.

இதில் தொடக்கத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடிய ரோஹித் சர்மா 1,170 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு மும்பை அணிக்கு வந்த ரோஹித் சர்மா தொடர்ந்து 9 ஆண்டுகளாக அணியில் நீடித்து வருகிறார்.

2013-ம் ஆண்டு மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா அந்த ஆண்டே அணிக்கு கோப்பையைப் பெற்றுத்தந்தார். இதுவரை ரோஹித் சர்மா தலைமையில் 4 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றுள்ளது.

ஏற்கெனவே டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009-ல் சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணியில் ரோஹித் இடம் பெற்றிருந்தார். ஆக, 5 சாம்பியன் பட்டம் வென்ற அணியில் ரோஹித் விளையாடியுள்ளார்.

இதற்கு முன் சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னா, ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவர் மட்டுமே 5 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தனர். இதில் விராட் கோலி 180 போட்டிகளில் 5,430 ரன்களையும், ரெய்னா, 193 போட்டிகளில் 5,368 ரன்களையும் சேர்த்துள்ளனர்.

4-வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் உள்ளார். 129 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 4,793 ரன்களுடன் உள்ளார்.

ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்கள் எட்டியதற்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் “ ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரா. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன், இன்னும் அதிகமான சாதனைகள் படைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x