Last Updated : 28 Sep, 2015 10:05 AM

 

Published : 28 Sep 2015 10:05 AM
Last Updated : 28 Sep 2015 10:05 AM

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அக்னீஸ்கா

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்விட்சர் லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வீழ்த்திய போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இப்போட்டியில், பெலிண்டா பென்சிச்சை, ரத்வன்ஸ்கா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். ரத்வன்ஸ்காவுக்கு நடப்பாண்டின் முதல் பட்டம் இதுவாகும். இவ்வெற்றி மூலம் ரத்வன்ஸ்கா இன்று வெளியாகவுள்ள தரவரிசைப் பட்டியலில் 5 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப்பிடிக்கிறார். இதனால், சிங்கப்பூரில் நடைபெறும் டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டிக்கும் ரத்வன்ஸ்கா தகுதி பெற்றுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு பான் பசிபிக் பட்டத்தை வென்ற ரத்வன்ஸ்கா, 2012-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் தோல்வியுற்றார். ஒரு பட்டத்தை 2-வது முறையாக வெல்வது ரத்வன்ஸ்காவுக்கு இது முதல் முறையாகும்.

வெற்றி குறித்து அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா கூறியதாவது: இன்று மிகச்சிறப்பாக விளையாடியதில் பெருமகிழ்ச்சி. எனது 200 சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் நிர்பந்தத்தை பெலிண்டா உருவாக்கினார். நான் 2-வது முறையாக ஒரு கோப்பையை வெல்வது இதுவை முதல்தடவை. எனவே, இந்த வெற்றி எனக்கு தனிச்சிறப்பு மிக்கது. உலகின் மிகச்சிறந்த வீராங்கனைகளுள் ஒருவருடன் மோதுகிறேன்.

இருப்பினும் இது இறுதிப்போட்டி. வெற்றி பெறுவதற்காக எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும். ஏராளமான இளம் வீராங்கனைகள் உருவெடுத்துள்ளனர். முதல் 10 இடங்களுக்குத் தகுதியானவர்கள் ஏராளம் உள்ளனர். எனவே, 8-வது இடத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. சிங்கப்பூர் தொடரில் பங்கேற்பதற்கு ஆசிய சுற்றுப்பயணம் எனக்கு முக்கிய மானது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.

பெலிண்டா பென்சிச் கூறும் போது, “இன்றைய போட்டியில் அனைத்துத் துறையிலும் ரத்வன்ஸ்கா சிறப்பாக செயல் பட்டார். நான் போராட முயற்சி செய்தேன். ஆனால், களைப் படைந்துவிட்டேன். அவரைப் போல விளையாடுவதற்கு நான் கற்கவேண்டியவை ஏராளம் உள்ளன. அவருக்கு எதிராக விளையாடுவது கடினமானது” என்றார்.

சீனாவின் வுகான் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க விருக்கிறார் பென்சிச். உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள 18 வீராங்கனைகள் இத்தொடரில் மோதவுள்ளனர். அதில் சிறப்பாக செயல்பட்டு முதல் 8 இடங்களைப் பிடித்து, சிங்கப்பூரில் நடைபெறும் போட்டிக்குச் செல்வதே தனது இலக்கு என பென்சிச் தெரிவித்துள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x