Last Updated : 16 Aug, 2020 05:08 PM

 

Published : 16 Aug 2020 05:08 PM
Last Updated : 16 Aug 2020 05:08 PM

தோனியின் மறுபக்கம்: கூல் கேப்டன் ‘சூடாகி சீறிய’ தருணங்கள் 

ஐபிஎல் தொடரில் நடுவரிடம் வாக்குவாதம் செய்த தோனி

புதுடெல்லி

தோனியை அடையாளப்படுத்தும் மற்றொரு வார்த்தை கூல் கேப்டன். சர்வதேச போட்டிகளில் எத்தனை நெருக்கடியான, இக்கட்டான சூழல் ஏற்பட்டபோதிலும் தனது கோபத்தை, பதற்றத்தை களத்தில் வெளிப்படுத்தாமல் செயல்பட்டவர் தோனி.

அதனால்தான் தோனியின் பொறுமையும், பதற்றப்படாமல் செயல்படும் தன்மையும்தான் பல நேரங்களில் அவரின் தலைமைக்கு வெற்றியைத் தேடித்தந்தன. ஆனால், தோனியும் கோபப்பட்டு களத்தில் சீறிய தருணங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. சாது மிரண்டால்.. என்ன நடக்கும் என்பதை அந்த சம்பவங்கள் நினைவூட்டின.

அது குறித்த சிறிய ரீவைண்ட்….

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில்தான் தோனியின் சீற்றத்தை ரசிகர்கள் காண முடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 151 ரன்களில் ஆட்டமிழக்க 152 ரன்கள் சேர்த்தால் வெற்றியுடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டைசிஎஸ்கே அணி இழந்தநிலையில் அம்பதி ராயுடு, தோனி நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை. களத்தில் ஜடேஜா, தோனி இருந்தனர். கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் இரு பந்துகளில் 9 ரன்கள் எடுக்கப்பட்டநிலையில், 3-வது பந்தில் தோனி போல்டாகி வெளியேறினார். சிஸ்கே தோல்வியின் பிடிக்கு சென்றது.

4-வது பந்தை பென் ஸ்டோக்ஸ் புல்டாஸாக வீசினார். ஆனால், தோள்பட்டைக்கு மேல் சென்ற பந்துக்கு லெக்அம்பயர் தான் நோபால் கொடுக்க வேண்டும். ஆனால், ஸ்டெம்ப் அருகே நின்றிருந்த நடுவர் உலாஸ் காந்தி நோபால் கொடுத்து அதை திரும்பப்பெற்றார். இதனால் களத்தில் இருந்த ஜடேஜாவும், சான்ட்னரும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைப் பெவிலியனிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தோனி, கோபத்துடன் மைதானத்துக்குள் நுழைந்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தோனி கோபப்பட்டு சென்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைப் பார்த்த ரசிகர்கள் , கூல்கேப்டனைப் பார்த்து வியந்தனர். இந்த போட்டியில் நடுவரிடம் கோபப்பட்ட தோனிக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

2-வது சம்பவம்

கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் சென்றது. அப்போது சிபி சீரிஸ் ஒருநாள் போட்டித் தொடரில் லீக் ஆட்டம் நடந்தது. இதில் ஆஸி. அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸி. வீரர் மைக் ஹசி களத்தில் பேட்டிங் செய்யும் போது தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். மூன்றாவது நடுவரிடம் முடிவு கோரப்பட்டது.

ஆனால், மூன்றாவது நடுவர் ஹசி ஸ்டெம்பிங் செய்யப்பட்டார் எனக் கூறி அவுட் அளித்துவிட்டது. ஆனால் டி.வி.ரீப்ளேயில் ஹசியின் கால் கிரீஸுக்குள் இருந்தது. இதைப் பார்த்த நியூஸிலாந்து நடுவர் பில்லி பவுடன், ஓய்வு அறைக்குச் சென்ற ஹசியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார். இதைப் பார்த்த தோனி, நடுவர் பில்லி பவுடனை பார்த்து விரலை நீட்டி கோபமாகப் பேசினார்.

அணியில் சக வீரர்கள் தன்னுடைய பேச்சை மதிக்காமல் இருக்கும் போது, தவறு செய்யும் போதும் அவ்வப்போது தோனி கோபப்பட்டதுண்டு, அந்த கோபமான வார்த்தைகள் ஸ்டெம்பில் உள்ள மைக் வழியாக வெளிவந்துள்ளன.

2009-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது துணைக் கேப்டன் சேவாக்குடன், தோனிக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தோனியை கோபப்படுத்தின.

3-வது சம்பவம்

2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரில் டி20 போட்டியின் போது, மறுமுனையில் இருந்த மணிஷ் பாண்டேவை 2-வது ரன் எடுக்க தோனி அழைத்தார். ஆனால், மணிஷ் பாண்டே கவனமாகக் கேட்கவில்லை. இதனால், தான் கூறியதை கவனமாகக் கேட்காத மணிஷ் பாண்டேவை களத்தில் வைத்து தோனி திட்டினார்.

ஷமி மீதுகோபம்

அதேபோல முகமது ஷமி 2014-ம் ஆண்டு நியூஸிலாந்து பயணத்தின் போது தோனியிடம் திட்டு வாங்கினார். பவுன்ஸர் போட வேண்டாம் என்று ஷமியிடம் கூறிவிட்டு வந்தபின் ஷமி மீண்டும் பவுன்ஸராக வீசினார்.

இதனால் தோனி கோபமாக ஷமியிடம் பேசிவிட்டுச் சென்றார். இதுகுறித்து ஷமி ஒருமுறை கூறுகையில் “ பவுன்ஸரை தேவையில்லாமல் நான் வீசியதற்காக மகி பாய் என்னிடம் வந்து பொய் சொல்லாதே. என்னுடைய காலத்தில் பல வீரர்கள் வந்து சென்றபை பார்த்துவிட்டேன் எனக் கோபப்பட்டார்“ எனத் தெரிவித்தார்.

வங்கதேச வீரருடன் மோதல்

2015-ம் ஆண்டு வங்கதேசப் பயணத்தின் போது, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கும் தோனிக்கும் மோதல் ஏற்பட்டது. தோனி வேகமாக ரன் எடுக்க ஓடி வரும்போது, ரஹ்மான் குறுக்கே வந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ரஹ்மானை பிடித்து தோனி தள்ளினார், இதில் ரஹ்மானுக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமும், தோனிக்கு 75 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சில சம்பவங்கள் மட்டுமே தோனியின் கோபத்தை வெளிப்படுத்தின. மற்றவகையில் களத்தில் எப்போதும் கூல் கேப்டன் எனும் வார்த்தைக்கு இலக்கணமாகவே தோனி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x