Last Updated : 14 Feb, 2020 11:14 AM

 

Published : 14 Feb 2020 11:14 AM
Last Updated : 14 Feb 2020 11:14 AM

ஐபிஎல் 2020: 'எங்கிட்டகூட சொல்லவில்லையே'-கோலி : 'புதிய லோகோ'வை வெளியிட்ட ஆர்சிபி அணி

2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கும் நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்(ஆர்சிபி) அணி புதிய லோகோவை இன்று அறிமுகம் செய்துள்ளது.

புதிய லோகோவில் இடம் பெற்றுள்ள சிங்கம், ஆர்சிபி அணி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றும், துணிச்சலாக, அச்சமில்லாமல் அடுத்த தொடரை எதிர்நோக்கி இருப்பதையும் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் எளிமை, ஐபிஎல் அணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த அணி எனும் பெயரையும் அந்த லோகோ அடையாளப்படுத்துகிறது.

ஆர்சிபி அணியின் புதிய லோகோ வெளியீடு குறித்து அந்த அணியின் தலைவர் சஞ்சீவ் சாவ்லா கூறுகையில் " ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுடன் எப்போதும் இருப்போம், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் புதிய லோகோ வடிவமைப்பு இருக்கிறது.

வரும் ஐபிஎல் சீசனில் துணிச்சலாகவும், உற்சாகமாகவும், கொண்டாட்டத்துடன் விளையாடுவதற்கும், உயிர்ப்புடன் நீடிக்கவும் இந்த லோகோவில் மாற்றம் செய்வது அவசியம் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஆர்சிபிஅணி கடந்த 2008-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றதற்குப் பின் ஒருமுறைகூட பட்டம் வெல்லவில்லை. மேலும், வழக்கமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரும் ட்விட்டரில் மாற்றப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றிலும் இதே பெயரே நீடிக்கிறது.

ஆர்சிபி அணியின் புதிய லோகோ, பெயர் மாற்றம் ஆகியவை குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலியும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது நியூஸிலாந்தில் பயணத்தில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கூறுகையில், " ஆர்சிபி எனும் வார்த்தை திடீரென சமூக வலைதளங்களில் இருந்து மாற்றப்பட்டது எனக்கு வியப்பாக இருந்தது, ஆர்சிபி அணியின் கேப்டனான என்னிடம் கூட இதைத் தெரிவிக்கவில்லை" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x