Published : 01 Feb 2020 08:04 AM
Last Updated : 01 Feb 2020 08:04 AM

சென்னை சிட்டி அணியை வென்றது மோகன் பகான்

ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோகன் பகான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கோவை நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28-வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் ஜோசெபா பீட்டியா உதவியுடன் பந்தை பெற்ற பாபா தியாவரா பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்வலையின் வலது பகுதியை துளைத்தது. இதனால் மோகன் பகான் 1-0 என முன்னிலை பெற்றது.

சென்னை சிட்டி அணி சுதாரிப்பதற்குள் அடுத்த சில நொடிகளில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து மோகன் பகான் அணி 2-வது கோலை அடித்தது. பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து பிரான் கோன்சலஸ் தலையால் முட்டிய பந்து கோல் வலையின் இடதுபுறத்தை துளைத்தது. இந்த கோலை அடிப்பதற்கும் ஜோசெபா பீட்டியாவே உதவியிருந்தார்.

முதல் பாதியில் மோகன் பகான் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் நோங்டம்பா நோரம்உதவியுடன் பந்தை பெற்ற பாபா தியாவரா பாக்ஸின் மையப் பகுதியில் இருந்துவலது புறத்தை நோக்கி கோல் அடித்து அசத்தினார். இதனால் மோகன் பகான் அணி 3-0 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது.

65-வது நிமிடத்தில் சென்னை சிட்டி தனது முதல் கோலை அடித்தது. சார்லஸ் லூர்துசாமி உதவியுடன் பந்தைபெற்ற விஜய் நாகப்பன் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்துகோல் வலையின் வலது புறத்தை நோக்கி கோல் அடித்தார்.

இதனால் உத்வேகம் பெற்றசென்னை சிட்டி அணி அடுத்த 5-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தது.

ராம் உதவியுடன் பந்தைபெற்ற ஜிஷ்னு பாலகிருஷ்ணன் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து கோல் வலையின் வலது புறத்தை நோக்கி கோல் அடித்தார். இதனால் சென்னை சிட்டி அணி 2-3 என நெருங்கி வந்தது. எனினும் மேற்கொண்டு சென்னை சிட்டி அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் மோகன் பகான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x