Published : 23 Jan 2020 09:58 AM
Last Updated : 23 Jan 2020 09:58 AM

சென்னை அணிக்கு 2-வது வெற்றி

பிரீமியர் பாட்மிண்டன் லீக்கில் மும்பை ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான மோதலை லக்சயா சென், டாமி சுகிர்தோ மற்றும் துருவ்-ஜெசிகா ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் 3-0 என வென்றது சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரீமியர் பாட்மிண்டன் லீக்கின் 5-வது சீசனின் முதற்கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி தனது 2-வது ஆட்டத்தில் மும்பை ராக்கெட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் சென்னையின் துருவ் கபிலா, ஜெசிகாபக் ஜோடி கிம் ஜி ஜங், பியா செபாதியா பெர்னாத் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் துருவ், ஜெசிகா 15-10, 15-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னையின் லக்சயா சென், லீ டாங் கியூனை எதிர்கொண்டார். உலகத் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள லீ டாங்குக்கு எதிராக, 108-வது இடத்தில் உள்ள லக்சயா சென் அபாரமான செயல் திறனை வெளிப்படுத்தினார். இதன் மூலம் 15-12, 15-10 என்ற நேர் செட் கணக்கில் லீ டாங் கியூனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் லக்சயா சென்.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸின் நட்சத்திர வீரரும் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளவருமான டாமி சுகிர்தோ, உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள மும்பை ராக்கெட்ஸின் பாருபள்ளி காஷ்யப்பை சந்தித்தார். இதில் டாமி சுகிர்தோ 14-15, 15-10, 15-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் மும்பை ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான மோதலை 3-0 என வென்றது சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் பி.வி.சிந்துவை உள்ளடக்கிய ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x