Published : 13 Oct 2019 07:55 PM
Last Updated : 13 Oct 2019 07:55 PM
இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்குப் பஞ்சமில்லை, ஆனால் இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய வேண்டுமென்றால் ஏற்கெனவே ஆடிக்கொண்டிருப்பவர்களை விட திறமையானவர்களாக இருந்தால்தான் முடியும் என்று உமேஷ் யாதவ் தெரிவித்தார்.
அணிக்குள் தேர்வு செய்யப்படுவதும் பெஞ்சில் அமரவைக்கப்படுவதுமாக இருக்கும் உமேஷ் யாதவ் மேலும் கூறியதாவது:
தற்போதைய அணியில் குறைந்தது 7-8 வீரர்கள் 40க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளனர். ஆகவே வரும் இளம் வீரர்கள் மூத்த வீரர்களின் கடின உழைப்பைப் பார்க்க வேண்டும், அவர்களுக்குச் சுலபமல்ல, அணிக்குள் வர வேண்டுமெனில் இளம் வீரர்கள் எங்களை விட சிறந்தவர்களாக இருந்தால்தான் முடியும்.
அனைத்துப் போட்டிகளிலும் நான் ஆடுவேனா என்பது என் கைகளில் இல்லை, அனைத்துப் பவுலர்களும் நன்றாக வீசுகின்றனர். ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது, ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருகட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு நானும் தயார், அதுதான் என் மனநிலையும் கூட.
நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடாத போது என்னை இந்தியா ஏ அணியில் தேர்வு செய்தனர், தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராகவும் ஆடினேன். ஒருநாள், டி20 போட்டிகளுக்கு இடைவெளி அதிகமாக இருக்கும் போது என்னெல்லாம் போட்டிகளில் வாய்ப்பிருக்கிறதோ என்னைத் தேர்வு செய்யுங்கள் என்று தேர்வாளர்களிடம் நான் கூறிவிட்டேன். ஏனெனில் போட்டிப் பயிற்சி முக்கியம்.
பிராக்டிஸ் இல்லாமல் வீட்டிலிருந்து வந்து சர்வதேச கிரிக்கெட் ஆடுவது கடினம். அதுவும் வேகப்பந்து வீச்சாளராக கடினம்.
-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT