Published : 19 Aug 2019 03:49 PM
Last Updated : 19 Aug 2019 03:49 PM
புஜாரா சதத்துடன் பயிற்சி ஆட்ட முதல் இன்னிங்சில் இந்திய அணி 297/5 என்று டிக்ளேர் செய்ய தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 181 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்சில் சுருண்டது.
இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பும்ரா 11 ஓவர்கள் வீசி 45 ரன்கள் விக்கெட் இல்லை, நவ்தீப் சைனி வீசினார், ஜடேஜா 12 ஓவர்கள் வீசினார் ஆனால் அஸ்வினுக்கு பவுலிங் கொடுக்காதது ஏன் என்பது புரியாத புதிராக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 56.1 ஓவர்கள் ஆடியும் அஸ்வின் ஒரு ஓவர் கூடப் போடவில்லை என்பது எதனால் என்பது புரியவில்லை.
புதிய பந்தில் இஷாந்த் சர்மாதான் சிறப்பாக வீசினார், அவர் ஜெரெமி சோலோசானோ மற்றும் பி.ஏ. கிங் ஆகியோரை சடுதியில் வீழ்த்தி பிறகு அரைசதம் கண்ட ஹாட்ஜ் என்பவரையும் இஷாந்த் வீழ்த்தினார்.
இந்திய அணியின் கேப்டன் ரஹானே, 6 பவுலர்கள் வீசினர். ஆனால் அஸ்வின் பவுலிங் வீசவில்லை, டெஸ்ட் போட்டியில் ஆடவிருக்கும் அஸ்வின் பயிற்சி ஆட்டத்தில் வீசவில்லை என்றால் என்ன பொருள், அவருக்கு பவுலிங் கொடுக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது உடல்நலக்குறைவு, காயம் காரணமா என்பதும் தெரியவில்லை.
பேட்டிங்கில் புதிய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மீண்டும் விரைவில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே முதல் இன்னிங்சில் சரியாக ஆடவில்லை இந்த முறை தொடக்கத்தில் இறங்கி 95 பந்துகளில் 20 ரன்கள் என்று அறுவை இன்னிங்ஸை ஆடினார். ஹனுமா விஹாரிதான் சரளமாக ஆடி 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்திய அணி 84 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று மொத்தம் 200 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறும், இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
2வது இன்னிங்சிலாவது அஸ்வின் வீசுவாரா என்பதைப் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT