Published : 24 Jun 2015 07:03 PM
Last Updated : 24 Jun 2015 07:03 PM

தவண், தோனி அரைசதங்களுடன் இந்தியா 317 ரன்கள் குவிப்பு

மிர்பூரில் நடைபெறும் 3-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச பவுலர் ரூபல் ஹுசைனுக்கு இந்த போட்டியில் சாத்துமுறை. 9 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மஷ்ரபே மொர்டசாவும் சாத்துமுறையில் சிக்கினாலும் அவர் 10 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முஸ்தபிசுர் ரஹ்மானை இந்திய பேட்ஸ்மெப்ன்கள் மரியாதையுடன் அணுகினர். அதனால் அவர் 10 ஓவர்களில் 57 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் கடைசியில் தோனியை வீழ்த்த அருமையான கேட்ச் ஒன்றை மிட்விக்கெட்டில் பிடித்து இன்றும் ரசிகர்களிடையே தடம் பதித்தார்.

தவண் மிகவும் அனாயசமாக, ஒரு அசாதாரண லாவகத்துடன் ஆடி 73 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து தோனி அடித்துக் கொண்டிருக்கும் போது முக்கியக் கட்டத்தில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா, மஷ்ரபே வீசிய 2-வது ஓவரில் மேலேறி வந்து கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு அராபத் சன்னியின் பந்தையும் மேலேறி வந்து மிகவும் அலட்சியமாக மிட் ஆன் மேல் சிக்சர் அடித்தார்.

ஆனால், 29 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்த நிலையில், இந்த தொடரில் 3-வது முறையாக முஸ்தபிசுர் ரஹிமிடம் அவுட் ஆனார். கவனச்சிதறல் போக்கு அவரிடம் தொடர்ந்ததன் விளைவே இது. வைடு, லெந்த் பந்தை ஷாட் அடிக்கச் சென்று எட்ஜ் செய்து, விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலியின் மோசமான ஆட்டம் தொடர்கிறது...

கோலி இறங்கியவுடன் அவ்வளவு சவுகரியமாக ஆடவில்லை. தவண் மட்டும் இடையிடையே பவுண்டரி அடித்தார். ஸ்கோர்போர்டை நகர்த்தினார். தனது 27-வது பந்தில் மேலேறி வந்து நசீர் ஹுசைன் பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி அடித்து தனது முதல் பவுண்டரியை அடித்தார்.

ஆனால் அதன் பிறகும் சோபிக்காத கோலி 35 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் வீசிய பந்தை பெரிய ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று பந்தை கோட்டைவிட்டு பவுல்டு ஆனார்.

உண்மையில் தேவையில்லாத ஷாட். ரன் விகிதம் ஓவருக்கு 6 ரன்கள் பக்கம் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பவர் பிளே முடிந்து 35 ஓவர் வரைக்கும் ஒன்று, இரண்டு என்றுதான் ரன்களை எடுத்திருக்க வேண்டும், மீண்டும் ஒரு முறை அணியின் சூழ்நிலையை கவனத்தில் கொள்ளாமல் ஆக்ரோஷமாக ஆடுகிறேன் பேர்வழி என்று சொத்தைப் பந்தில் பவுல்டு ஆகிச் சென்றார்.

தவணும், இவரும் சேர்த்த 75 ரன்களில் இவரது பங்களிப்பு 25 மட்டுமே.

தோனி களமிறங்கி மிகவும் சாமர்த்தியமான ரிஸ்க் எடுத்து ஷாட்களை ஆடினார். நசீர் ஹுசைன் ஓவரில் மேலேறி அந்து ஸ்கொயர்லெக்கில் ஒரு பவுண்டரியையும், அடுத்த பந்தும் மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரு அதிரடி சிக்சரையும் விளாசித் தொடங்கினார்.

இவரும் தவணும் இணைந்து 7 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து ஸ்கோர் மீண்டும் ஆரோக்கியமாகச் சென்று கொண்டிருந்த போது மஷ்ரபே வீசிய ஓவரில் ஒரு பவுண்டரியை அருமையாக அடித்து விட்டு அடுத்த பந்தில் எங்கு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய மெதுவான ஆஃப் கட்டரை மிட்விக்கெட்டில் அடிக்க தேர்வு செய்தார், ஆனால் அங்கு நசீர் ஹுசைன் மிகவும் அருமையான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். தவண் உண்மையில் தன் அதிர்ஷ்டததை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தோனி அடித்து ஆடலாம் என்ற நிலையில் இருக்கும் போது அவர் கூறுவது போலவே எதிர்முனையில் தவண் ஆட்டமிழக்க, தோனி மீண்டும் சிங்கிள்களின் வழிக்குத் திரும்பினார்.

33-வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே எடுக்கப்பட்டது. 32 ஓவர்களில் 176/3 என்ற நிலையிலிருந்து பவர் பிளேயில் 28 ரன்களையே எடுத்து 37-வது ஓவரில் ஸ்கோர் 204/3 என்று இருந்தது.

ராயுடுவும் தோனியும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 17 ஓவர்களில் 93 ரன்கள் சேர்த்தனர். ராயுடு 49 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.

மோசமான நடுவர் தீர்ப்பும் ராயுடுவின் எரிச்சலும்

இந்நிலையில் 44-வது ஓவரை மஷ்ரபே மொர்டசா வீச 3-வது பந்தை நன்றாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்று பைன்லெக்கில் ஓங்கி அடிக்க நினைத்தார் ராயுடு, ஆனால் பந்து அவரது தொடையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் செல்ல முறையீடு செய்தனர், நடுவர் அவுட் கொடுத்தார். மிகவும் மோசமான தீர்ப்பு.

பந்துக்கும், மட்டைக்கும் கொஞ்சம் கூட தொடர்பில்லை. கேட்டவுடன் கையை உயர்த்தினார் நடுவர். ராயுடு உடனேயே தனது அதிருப்தியை தெரிவித்ததோடு, பெவிலியன் செல்லும் போது நடுவரை எரிச்சலுடன் பார்த்தபடியே சென்றார். தோனியும் நடுவரிடம் ஏதோ கேட்டது போல் தெரிந்தது.

தோனி 77 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து மோர்டசாவின் லெக்ஸ்டம்பில் வந்த பந்தை பிளிக் செய்ய முயன்றார். ஆனால் பந்து முன் விளிம்பில் பட்டு மிட்விக்கெட்டில் மேலே செல்ல, எல்லைக்கோட்டிலிருந்து சில அடிகள் முன்னால் வந்து டைவ் அடித்துப் பிடித்தார் முஸ்தபிசுர் ரஹ்மான்.

தோனி இந்த முறை முஸ்தபிசுர் ரஹ்மானை சிறப்பாக எதிர்கொண்டார். நன்றாக பின்னால் சென்று பந்து வந்த பிறகே மட்டையைக் கொண்டு சென்றார். தோனியின் நல்ல இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

சுரேஷ் ரெய்னா இறங்கியவுடன் ரூபல் ஹுசைன் புல்டாஸை மிட்விக்கெட்டில் சிக்சருக்கு விரட்டினா. ரெய்னாவின் ஃபேவரைட் ஷாட் இது. அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 38 ரன்களை அசால்ட்டாக எடுத்து 49-வது ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மானிடம் பவுல்டு ஆனார். பின்னி 17 ரன்களையும், அக்சர் படேல், மிகப்பெரிய சிக்சருடன் 5 பந்துகளில் 10 ரன்களையும் எடுக்க இந்தியா 6 விக்கெட் இழப்புக்குக் 317 ரன்கள் எடுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x