Published : 01 Jun 2015 09:27 PM
Last Updated : 01 Jun 2015 09:27 PM

கட்டுக்கடங்காத கிறிஸ் கெயில்: 62 பந்துகளில் 151 ரன்கள்

டாண்டன் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கெண்ட் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 62 பந்துகளில் 151 ரன்கள் விளாசித் தள்ளினார்.

இதில் வேடிக்கை என்னவெனில் கெண்ட் அணியின் 227 ரன்கள் இலக்கை துரத்திய போது சோமர்செட் அணிக்காக கெயில் இந்த இன்னிங்சை ஆடி கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தும் 3 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் அணி தோல்வி தழுவியது. கெயில் 10 பவுண்டரிகள் 15 சிக்சர்களை விளாசினார்.

இப்படி அடித்தும் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கெயிலிடம் ஸ்ட்ரைக் வரவில்லை. 2 பந்துகள் கழித்தே கெயிலுக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. முன்பாக சொஹைல் தன்வீர் ஆட்டமிழந்தார். கெயில் ஸ்ட்ரைக்கு வந்த போது 4 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கெயிலால் முடியாதது ஒன்றுமல்ல என்ற நிலையில், 2 ரன்கள் மற்றும் பவுண்டரி அடித்து 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

கெயிலின் இந்த ஆக்ரோஷத் தாக்குதலிலும் மிட்செல் கிளேய்டன் என்ற வேகப்பந்து வீச்சாளர் அவருக்கு ரன் இல்லாத அதிசய பந்து ஒன்றை வீசினார். கடைசி பந்து சிக்சருக்குப் பறந்தது, ஆனால் இலக்குக்கு 3 ரன்கள் குறைவாக முடிந்தது சோமர்செட். இந்த அதிரடியிலும் மிட்செல் கிளெய்டன் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அன்று எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக 59 பந்துகளில் 92 ரன்கள் அடித்து வெற்றி பெறச் செய்த கெயில், எதிர்முனையில் மார்க்கஸ் டிரெஸ்கோதிக், மற்றும் பீட்டர் ட்ரீகோ ஆகியோர் ஆட்டமிழந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். 22/2 என்ற நிலையில் சோமர்செட் தோல்வி தவிர்க்க முடியாதது என்ற நிலை இருந்தது.

ஆனால் கெயில் அடுத்த 8 பந்துகளில் 3 ராட்சத சிக்சர்களை அடித்தார். அவருடன் ஜேம்ஸ் ஹில்ட்ரெத் என்பவரும் சேர அதிரடி முறையில் 9 ஓவர்களில் 113 ரன்கள் ஜோடி சேர்ந்து குவிக்கப்பட்டது. 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 29 பந்துகளில் அரைசதம் கடந்த கிறிஸ் கெயில், அடுத்த 33 பந்துகளில் 100 ரன்களை பின்னித் தள்ளினார்.

3 பந்துகள் டாண்டனின் டோன் நதியில் போய் விழுந்தது. மேலும் சில சிகர்கள் செயிண்ட் ஜேம்ஸ் சர்ச்யார்டில் போய் விழுந்தது. ஹில்ட்ரெத் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போதும் 7 ஓவர்களில் வெற்றிக்கு 93 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கெயில் நதிக்கும் சர்ச்யார்டுக்கும் அடித்து 16 பந்துகளில் அடுத்த அரைசதம் அடித்து 45 பந்துகளில் சதம் எட்டினார். அதன் பிறகு அடுத்த 17 பந்துகளில் 151 ரன்களை எட்டினார். ஆனால் நாட் அவுட்டாக இருந்தும் போட்டியில் தோல்வி தழுவியது சோமர்செட்.

முன்னதாக கெண்ட் அணியில் பெல்-ட்ரமண்ட் 51 ரன்களையும், கேப்டன் நார்த்தீஸ்ட் 58 பந்துகளில் 114 ரன்களையும் எடுக்க கெண்ட் அணி 227/7 என்று ரன் குவித்தது.

நதியில் விழுந்த கெயில் சிக்சர் பந்தை நீச்சல் அடித்து எடுத்த ரசிகர்:

கெயிலின் கடைசி சிக்சர் அதாவது 20-வது ஓவர் கடைசி பந்தில் அவர் அடித்த சிக்சர் டோன் நதியில் போய் விழுந்தது. இந்த ஆட்டத்தின் நினைவுகளைத் தக்க வைக்க முனைந்த மார்ட்டின் புல்லக் என்ற ரசிகர் நதியில் குதித்து நீச்சல் அடித்து பந்தை கரைக்க்குக் கொண்டு வந்தார்.

அவர் தனது ட்விட்டரில், “கிறிஸ் கெயில் இன்னிங்சை பார்த்து மிரண்டு போயுள்ளேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x