Last Updated : 19 Jun, 2015 09:42 AM

 

Published : 19 Jun 2015 09:42 AM
Last Updated : 19 Jun 2015 09:42 AM

நார்வே செஸ்: 2-வது சுற்றில் ஆனந்த் டிரா

கிராண்ட் செஸ் தொடரின் ஒரு பகுதியாக நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வரும் நார்வே செஸ் போட்டியின் 2-வது சுற்றிலும் ஆனந்த் டிரா செய்துள்ளார். அதேநேரத்தில் நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் முதல் இரு சுற்றுகளிலும் தோல்வி கண்டுள்ளார்.

முதல் சுற்றில் இத்தாலியின் பேபியானோ கருணாவுடன் டிரா செய்த ஆனந்த், 2-வது சுற்றில் நெதர்லாந்தின் அனீஷ் கிரியுடன் டிரா செய்துள்ளார். இன்னும் 7 சுற்றுகள் மீதமுள்ளன.

தற்போதைய நிலையில் பிரான்ஸின் மேக்ஸைம் வசியெர், அமெரிக்காவின் நாகமுரா, அனீஷ் கிரி, கருணா, பல்கேரியாவின் வெஸலின் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். ஆனந்த் ஒரு புள்ளியுடன் 6-வது இடத்திலும், ரஷ்யாவின் அலெக்சாண்டர், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், நார்வேயின் ஹேமர் ஆகியோர் தலா 0.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளனர். கார்ல்சன் புள்ளி ஏதுமின்றி கடைசி இடத்தில் உள்ளார்.

-----------------------------------------------------------------------------------------------------------------

பாட்மிண்டன்: 12-வது இடத்தில் பிரணாய்

சர்வதேச பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 12-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவருடைய அதிகபட்ச தரவரிசை.

இந்திய வீரர்களில் 3-வது இடத்தில் உள்ளார் பிரணாய். இந்தியாவின் காந்த் சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்திலும், காஷ்யப் 10-வது இடத்திலும் உள்ளனர். 22 வயது பிரணாய், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில மாதங்கள் விளையாடாமல் இருந்த நிலையில், கடந்த ஏப்ரலில் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் காலிறுதி வரை முன்னேறினார். அதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், இப்போது தரவரிசையில் முன்னற்றம் கண்டுள்ளார்.

மகளிர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் சாய்னா நெவால் 2-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து தொடர்ந்து 14-வது இடத்தில் உள்ளார்.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 15-வது இடத்தில் உள்ளது. ஆனால் கலப்பு இரட்டையர் தரவரிசையின் முதல் 25 இடங்களில் இந்தியர்கள் யாரும் இல்லை.

-----------------------------------------------------------------------------------------------------------------

பயிற்சி ஆட்டம்: இந்தியா வெற்றி

உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் நாளை தொடங்குகின்றன. அதை முன்னிட்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி நேற்று தனது 4-வது பயிற்சி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை சந்தித்தது.

இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்தியா கோலடித்தது. இந்திய வீரர் குர்பஜ் சிங்கின் வசம் பந்து செல்ல, அவர் பிரிட்டன் பின்கள வீரர்கள் சுதாரிப்பதற்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் அசத்தலாக கோலடித்தார்.

தொடர்ந்து 12-வது நிமிடத்தில் இந்தியாவின் 2-வது கோலை அடித்தார் வால்மீகி. இதன்பிறகு 20-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோலடிக்க, இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு பிரிட்டன் அணி 28-வது நிமிடத்தில் ஆறுதல் கோலை அடித்தது. இறுதியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x