Published : 16 May 2015 04:20 PM
Last Updated : 16 May 2015 04:20 PM
வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலக்கு கோரியதாக செய்திகள் எழுந்ததையடுத்து அவர் விளையாடுவது அவசியம் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
"விராட் கோலி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஒருநாள் போட்டிகளின் போது விலகிக் கொள்ளலாம். உண்மையில் விராட் கோலி, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு தேவையே. கடந்த 4 மாதங்களாக சில வீரர்களுக்கு பணிச்சுமை கடுமையாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
வங்கதேசத்துக்கு வலுவான இந்திய அணி செல்வது மிக முக்கியம். பாகிஸ்தானை அவர்கள் ஒருநாள் தொடரில் மிகவும் எளிதான வீழ்த்தியதைப் பார்க்கும் போதும், டெஸ்ட் போட்டியில் ஏற்படுத்திய சவாலைப் பார்க்கும் போதும் அந்த அணி சீராக எழுச்சி பெற்று வருகிறது என்பதை அறிவிக்கிறது.
எனவே அந்த ஒரு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவது அவசியம்.
தோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த முறை வங்கதேசத்துக்கு இந்திய அணி ‘ஏ’ அணி போன்ற ஒரு அணியை அனுப்பியது, ஆனாலும் தொடரை வென்றோம், ஆனால் இது நடந்து ஓராண்டு ஆகிறது. வங்கதேச அணி அதன் பிறகு நன்றாக விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை 3-0 என்று வீழ்த்தியுள்ளது.
எனவே வலுவான இந்திய அணி செல்வது அவசியம். நிச்சயம் வலுவான ஒருநாள் அணியே அனுப்பப்படும் என்று நான் நம்புகிறேன்”
இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT