Published : 02 Apr 2015 04:52 PM
Last Updated : 02 Apr 2015 04:52 PM

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவதில் மகிழ்ச்சி: மைக் ஹஸ்ஸி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீர்ர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளின் போது தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறப்பு ஆலோசகராகச் செயல்பட்ட மைக் ஹஸ்ஸி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை என்று கூறியிருந்தார். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்றார். ஆனால் அவர் கூறியதற்கு மாறாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னைக்கு வந்த மைக் ஹஸ்ஸி, "மீண்டும் சென்னைக்கு வந்ததில் மகிழ்ச்சி. இங்கு எனக்கு எண்ணற்ற நண்பர்கள் உள்ளனர், சேப்பாக்கத்தில் விளையாடியது பற்றிய இனிமையான நினைவுகள் உள்ளன. மீண்டும் சென்னை அணிக்குத் திரும்பியதை பெருமையாகக் கருதுகிறேன்" என்றார் மைக் ஹஸ்ஸி.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய போது 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டமும், ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டமும் வென்றது சென்னை.

ஐபிஎல்-8 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாய்ப்பு பற்றி ஹஸ்ஸி கூறும்போது, “மிகச்சிறந்த அணி கடைசி வரை திறமை இருக்கிறது, அதனால் இம்முறை வாய்ப்புள்ளது.

அணியில் வாய்ப்புகளுக்காக வீரர்களிடையே போட்டி உள்ளது. இது எப்போதும் ஆரோக்கியமானதே.

இதனால் தொடக்கத்தில் களமிறங்கினாலும் சரி, நடுக்களத்தில் இறங்கினாலும் சரி, அல்லது களத்துக்கு வெளியே இளம் வீரர்களுக்கு உதவிபுரிவதாக இருந்தாலும் சரி எந்த ஒரு பணிக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்" என்றார் மைக் ஹஸ்ஸி.

தோனி பற்றி கூறிய மைக் ஹஸ்ஸி, “ஆட்டம் பற்றி தோனிக்கு மிகப்பெரிய புரிதல் உள்ளது. வீரர்கள் மனநிலை பற்றியும் நன்றாக புரிந்து வைத்துள்ளார். அவரது குணாம்சம் சீரானது. வெற்றி, தோல்விகளை சமமாகப் பாவிக்கிறார். இது ஒரு கேப்டனுக்கு மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

ஜடேஜா பற்றி...

உலகக் கோப்பையில் அவர் மிகவும் பாகம்படாத நிலையில் இருந்தார். 7-ம் நிலையில் இறங்கி விளையாடுவது சுலபமல்ல. அந்த நிலையில் விளையாடுவது கடினமே. ஆனால் ஜடேஜாவிடம் திறமைகளுக்குக் குறைவில்லை என்றே கருதுகிறேன். என்றார் ஹஸ்ஸி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x