Published : 22 Apr 2015 03:54 PM
Last Updated : 22 Apr 2015 03:54 PM
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளரான நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி, அஸ்வின் பந்து வீச்சை தனிச்சிறப்பு வாய்ந்தது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் டி20.காம் இணையதளத்தில் வெட்டோரி இவ்வாறு கூறியுள்ளார்.
"சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளை எடுத்துக் கொண்டால், சில சுழற்பந்து வீச்சாளர்களே சவாலை சிறப்பாக எதிர்கொண்டனர். குறிப்பாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர்.
நியூஸிலாந்தின் சிறிய மைதானங்களில் ஸ்பின்னர் ஒருவர் சிறப்பாக வீச முடிகிறது, ஆஸ்திரேலியாவிலும் சரியாக வீச முடிகிறது என்றால் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு விதமான பங்களிப்புகளை தங்கள் பந்து வீச்சு மூலம் செய்ய முடியும் என்றே நான் கருதுகிறேன்.
முழங்கையை மடக்கி வீசுவதில் கட்டுப்பாடுகள் வந்த பிறகு ஸ்பின் பந்து வீச்சு சற்றே மாறியுள்ளது. இதனால் 2 ஸ்பின்னர்கள் பீல்டில் தற்போது இல்லை, ஆனால் மரபான ஸ்பின் பந்து வீச்சாளர்கள் தங்களது திறமைகளினால் நம்பமுடியாத அளவுக்கு சுழற்பந்து வீச்சில் வெற்றி பெற முடியும் என்பதை அஸ்வின் தன் பந்து வீச்சினால் நிரூபித்துள்ளார்” என்றார் வெட்டோரி.
டெஸ்ட் போட்டிகளில் எந்த பேட்ஸ்மெனுக்கு பந்து வீசியதை மகிழ்ச்சியாக கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு டேனியல் வெட்டோரி, “டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் திராவிட் என்றே நான் கூறுவேன். அவர் பந்தின் அளவை சரியாகக் கணிப்பதன் மூலம் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தனிச்சிறப்பான திறமை கொண்டவர். பந்தின் அளவை முன்னமேயே கணித்து முன்னால் வருவதோ, பின்னால் செல்வதோ ராகுல் திராவிடுக்கு கைவந்த கலை.
ராகுல் திராவிடை சிரமப்படுத்தும் ஒரு பந்தை நான் அவருக்கு வீசியதாக என்னால் கூற முடியவில்லை. அவரது பேட்டிங்கின் முன்னால் சுழற்பந்து விச்சாளர்கள் செயலிழந்து விடுகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT